வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தர தெரிவித்துள்ளார்.
சமய நல்லிணக்கத்தை இலக்காக கொண்டு வன்னி பிராந்திய சமுதாய பொலிஸ் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தென்னஞ்சோலை மரநடுகை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயவளாகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஐயசுந்தர முதன்மை அதிதியாக கலந்துகொண்டு மரநடுகை நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த பிரதேசத்தில் குறித்த நிகழ்வு நடைபெறுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நிரந்தர சமாதானம், நல்லிணக்கத்திற்கு சமுதாய பொலிஸ் சேவை மிகவும் அவசியமானதாகும்.
கிராமத்திற்கு பொலிஸ் என்ற நடமாடும் சேவை மூலம் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான வேலைதிட்டங்கள் வவுனியாவில் செய்யபட்டுள்ளன.
அவை நாட்டின் அபிருத்திக்காக பொலிசாரின் பங்களிப்பாக இருக்கிறது. இந்த வேலைதிட்டம் ஊடாக வடக்கு மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் சிறந்த உறவு நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கில் தற்போது அதிகரித்துள்ள குற்றச் செயல்கள் போதைவஸ்து பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியன குறைவதற்கு சமூகத்தின் ஒத்துழைப்பு பொலிசாருக்கு தேவை.
இது நாட்டு மக்களுக்கான பொலிஸ் அதனை பாதுகாப்பது உங்களின் பொறுப்பு. சிறந்த பொலிஸ் சேவையின் மூலம் வடக்கு மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையும் என நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment