பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி அறிக்கையுடன் தொடர்புள்ள சீ 350 முதல் சீ 360 வரையான கோப்புகள் ஜனாதிபதியின் செயலாளரினால் தனக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான கோப்புகள் கிடைத்த பின்னர் அவற்றை சபையில் சமர்ப்பிப்பதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்பத்தில் பிணைமுறி அறிக்கை தொடர்பில் அறிவிப்பு வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.சபாநாயகரின் அறிவிப்பையடுத்து சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதோடு பேப்பச்சுவல் ட்ரசறி உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்ற 118 பேர் தொடர்பான குற்றச்சாட்டினால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதால் அதனை அம்பலப்படுத்துமாறு ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு எம்.பிக்கள் கோரினர். சில ஒன்றிணைந்த எதிரணி எம்.பி.க்கள் தான் அலோசியஸிடம் பணம் பெறவில்லை என்று தெரிவித்து சத்தியக் கடதாசிகளும் சமர்ப்பித்தார்கள்.
தனக்கு சீ 350 முதல் சீ 360 வரையான அறிக்கையே கிடைத்துள்ளதாகவும் ஒன்று முதல் சீ 349 வரையான கோப்புகளை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளரை கோரியுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். முழுமையான அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டதோடு தாம் பணம் பெறவில்லை என்றும் தாம் நிரபராதி எனவும் கூறினார்கள்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள கோப்புகளில் 118 பேரின் பட்டியல் இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட சபாநாயகர் ஜனாதிபதி செயலாளர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் அறிக்கையை வழங்க ஆவண செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். பிணை முறி தொடர்பான சில கோப்புகள் வெளியாகாததை அடிப்படையாக வைத்து சமூகத்தில் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன.
இதனால் நாட்டுக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. பாராளுமன்ற விவகார குழுவில் எடுத்த முடிவின் பிரகாரம் முழு ஆவணமும் கிடைத்த பின்னர் அதனை சமர்ப்பிக்க இருக்கிறோம். சோடிக்கப்பட்ட தகவல்களினால் பாராளுமன்றத்திற்கு அவப்பெயர் ஏற்பட இடமளிக்கக் கூடாது.
No comments:
Post a Comment