திருகோணமலை மீனவர்களுக்கு ஏழு கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை இன்று முதல் நீக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை மாலை கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த சில ஆண்டுகளாக திருகோணமலை மீனவர்கள் ஏழு கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க மீன் பிடி திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இத்தடையை மீறிய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வந்தனர்.
இந்த தடையினால் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி நகர சபை உறுப்பினர் ஜனாப்தீன் ரிஸ்வி, ஐக்கிய தேசிய வேட்பாளரும், கிண்ணியா அனைத்து மீன்பிடி சங்க தலைவருமான பாயிஸ் மற்றும் வேட்பாளர் கால்தீன் ஆகியோர் என்னிடம் முறையிட்டனர்.
உண்மையில் சிறிய ரக இயந்திர படகுகளை கொண்டு ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் ஆழ்கடலில் கடும் காற்றுக்கு மத்தியில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்வது சாத்தியமற்றது.
மேலும் இந்த மாவட்ட பூகோள அடிப்படையில் ஏழு கிலோமீட்டர் என பிரிக்கப்பட்டிருந்த எல்லையிலும் பாரிய சிக்கல் காணப்படுகின்றது.
எனவே இது தொடர்பான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாக மீன்பிடி சங்க உறுப்பினர்களுடன் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினோம். பிரட்சினைகளை ஆராய்ந்த அமைச்சர் ஏழு கிலோமீட்டர் எல்லைக்குள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மூன்று மாத காலத்துக்கு அனுமதி அளித்துள்ளார்.
இந்த காலப்பகுதிக்குள் அமைச்சின் அதிகாரிகள் மீன்பிடி சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்தோரை அழைத்து கலந்துரையாடி நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
ஊடகப்பிரிவு
No comments:
Post a Comment