ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் - உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமை காரணமாக வயல் நிலங்களும் விவசாயக் காணிகளும் நீரால் நிறைந்து விவசாயிகள் பலத்த இன்னல்களையும் நஷ்டங்களையும் எதிர்கொண்டு வந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்றிரவு விவசாயிகள் குழுவொன்று தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவைத் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பான பொறியியலாளர்கள், உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்ட பிரதியமைச்சர் அவர்கள், இதற்கான தீர்வாக முகத்துவார நீரோடையை வெட்டி திறந்து விட வேண்டுமெனக் கூறியதையடுத்து, உடனடியாக இன்று (29) காலையே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணிப்புரை விடுத்தமைக்கமைவாக தற்போது முகத்துவாரத்தை வெட்டி நீரை வழிந்தோடச் செய்யும் பணி நடைபெறுகிறது.
குறித்த வேலைத்திட்டத்தை பிரதியமைச்சர் மௌலானா அவர்கள் நேரடியாக களத்தில் நின்று கண்காணித்து செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் கேள்வியுற்ற பிரதேச விவசாயிகள் சம்பவ இடத்திற்கு தேடி வந்து பிரதியமைச்சர் மௌலானா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள பங்குடாவெளி, செங்கலடி நேரக்குடா, நைனா வெளி களித்தீவு, வெள்ளக்குடா, இலுப்படிச்சேனை, களித்தீவு உட்பட பல பிரதேசங்களில் விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய காணிகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் முஹம்மது அஸ்மி
No comments:
Post a Comment