வாழைச்சேனையில் 75வது மாதிரிக் கிராமமான முல்லை நகர் வீடமைப்புத் திட்ட வீடுகள் வீடமைப்பு அமைச்சரால் மக்களிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

வாழைச்சேனையில் 75வது மாதிரிக் கிராமமான முல்லை நகர் வீடமைப்புத் திட்ட வீடுகள் வீடமைப்பு அமைச்சரால் மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 75வது மாதிரிக் கிராமமான முல்லை நகர் வீடமைப்புத் திட்ட திறப்பு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.உதயகுமார், வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சித்திரவேல், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர்களான ஆ.ஜெகன், எல்.ரி.எம்.புர்க்கான், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வீட்டுத் திட்டமானது பயனாளிகளின் ஐம்பது வீத பங்களிப்புடனும், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் ஐம்பது வீத கடன் அடிப்படையிலான நிதியளிப்பிலும் 550 சதுரடி கொண்டதாக இருப்பதைந்து வீடுகள் அமையப்பெற்றுள்ளது.
அத்துடன் ஒவ்வொரு பயனாளிக்கும் பத்து பேர்ச் காணி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன், இம் மாதிரிக் கிராமத்திற்கு தேவையான சில அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தெரிவித்தார்.
இதன்போது இரண்டு இலட்சம் ரூபாய் கடன் தொகை இருறூறு பேருக்கும், மூப்பதாயிரம் கடனாகவும், இருபதாயிரம் மானியமாகவும் இருறூறு பேருக்கும், ஐந்து இலட்சம் ரூபாய் மானியம் இருறூற்றி ஐம்பது பேருக்கும், சொந்துறு பியச திட்டத்தில் இரண்டு இலட்சம் ரூபாய் ஐம்பது பேருக்கும் பண உதவி வழங்கி வைக்கப்பட்டதுடன், முல்லை நகர் வீடமைப்புத் திட்ட இருபத்தைந்து பயனாளிகளுக்கு வீட்டின் ஆவணப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேசன் பயிற்சியை பூர்த்தி செய்த இருநூறு பேருக்கு மேசன் உபகரணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பட்டதுடன், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நூற்றி இருபத்தி இரண்டு பேருக்கு மூக்கு கண்ணாடிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு இருபத்தைந்து வீடுகளில் சிறந்த முறையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டவர்களில் முதலாம் இடத்தினை பெற்ற திருமதி.நடேசன் தவமணி என்பவருக்கு பதினையாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும், இரண்டாம் இடத்தினை பெற்ற எஸ்.சிவகுமார் என்பவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும், மூன்றம் இடத்தினை பெற்ற திருமதி.எஸ்.சுதர்சன் என்பவருக்கு ஐயாயிரம் ரூபாய் பணமும் சான்றிதழும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லை நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாட்டு ஆவணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததையும் அமைச்சர் பார்வையிட்டதுடன், கிராமத்தில் மரக்கன்றையும் நாட்டி வைத்தார்.
மேலும் கண்ணகிபுரம் முல்லை நகர் வீடமைப்புத் திட்ட மக்களினால் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

எஸ்.எம்.எம். முர்ஷித்
ஊடகவியலாளர்
வாழைச்சேனை

No comments:

Post a Comment