அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் தங்களுக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற போது, 06 பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் இதற்கு பின்னணியில் இருக்கலாம் என, தாக்குதலுக்குள்ளானோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தமிழர்களிடமிருந்து முஸ்லிம்கள் காணி வாங்கக் கூடாது எனவும் மீறி வாங்கினால் கொலையும் செய்வோம் என, தாக்கியோர் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வினவாத தாக்குதலை கண்டிப்பதாகவும், கறுப்பு துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட வகையில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுளளனர்.
இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த காணி விடயம் தொடர்பில் இதற்கு முன்னரும் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்ற நிலையில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தாக்குதலில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த, சமீம் (காணி உரிமையாளர்), ஜம்சீத் அலி, மும்தாஸ், நிசாம், றிகாஸ், ஹிப்பதுல் கரீம் ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர், ஏ.சி. நுஃமான், இவ்வாறான இனங்குளுக்கிடையில் குரோதத்தை வளர்த்து நல்லிணக்கத்திற்கு தீமூட்டும் கும்பல்களின் செயலை அனைத்து இனங்களுக்கிடையிலும் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் விரும்பும் ஒரு மனிதனாக வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment