மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையை விவாதத்திற்கு எடுத்து, தாமதியாது அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படியும் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களைக் கோரியுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை தாமதியாது உரிய காலத்தில் நடத்துவதற்குஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாதிருப்பதினாலே தற்போது ஆளுநரின் அதிகாரத்தின் கீழள்ள வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலதாமதமாவதற்குக் காரணம் எனவும் பிரதிதேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக் காலம் காலவதியாகி 8 மாதங்களாகியும் அம்மாகாணங்கள் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இவ்வருட இறுதியிலும் மேல், தென் மற்றும் ஊவா மாகாணசபைகளின் பதவிக்காலம் அடுத்த வருடத்திலும் காலவதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவிக்காலம் காலவதியாகியுள்ள சப்ரகமுவ வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தலை தாமதியாது விரைவில் நடாத்தும்படி கூட்டு எதிரணியினர், கபே அமைப்பு என்பன அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.
Vidivelli
No comments:
Post a Comment