முறிகள் மோசடியுடன் தொடர்புபட்டவர்களிடம் சலுகைகளைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 118 பேரின் பெயர்களை வௌிப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பேர்ப்பச்சுவல் வர்த்தகக் குழுமத்தின் நிறுவனமொன்றின் ஊடாக பணம் பெற்றுக்கொண்டமை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின் போது கண்டறியப்பட்டது.
இந்த விசாரணை தொடர்வதுடன் கொழும்பு 2, பாக்லண்ட் கட்டடத்திலுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் அலுவலகம் நேற்று மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சட்ட மா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனையின் போது, மேலும் சில ஆவணக் கோவைகளை அதிகாரிகள் கைப்பற்றியதுடன், அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
குறித்த நிறுவனத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக்கொண்ட மேலும் பலரது பெயர்கள் இந்த விசாரணைகளின் போது வௌிவரும் என சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
முறிகள் மோசடியுடன் தொடர்புள்ள பேர்ப்பச்சுவல் வர்த்தகக் குழுமத்தின் நிறுவனமொன்றின் மூலம் நிதி பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் 118 பேர் இவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலான தகவல்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளதாகவும் அந்த ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை எனவும் பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment