நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை நாட்டில் ஏற்படக் கூடாது – ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

நீதித்துறையினர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் நிலை நாட்டில் ஏற்படக் கூடாது – ஜனாதிபதி

சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (31) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நீதித்துறையினர் மட்டுமின்றி சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஊழியர்கள் முகங்கொடுத்திருக்கும் சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
நீதிபதிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் குறித்து முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி இ அவர்களது நியாயமான மனக்குறைகளை முன்வைப்பதற்கு விசேட பிரிவொன்றை தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்றை இதற்காக நியமித்து அந்தப் பிரிவை நடாத்திச்செல்ல வேண்டும் என்று முன்மொழிந்தார்.

சட்ட ஆட்சியை பலப்படுத்துவது ஒரு நாட்டில் சிறந்த பண்பாடான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு முதன்மையான அடிப்படையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துதல்இ சுதந்திரமான ஜனநாயக சமூகத்தையும் ஊழல் மோசடிகளற்ற சமூகத்தையும் கட்டியெழுப்புதல் என்பனவே 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்வதற்கான நோக்கங்களுள் முக்கியமாக இருந்ததாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் சிலர் எல்லை தாண்டிச் சென்று அனுபவிக்க முயற்சிக்கின்ற காரணத்தினால் பண்பாடான சமூகமொன்றிற்கு பொருத்தமில்லாத பல்வேறு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்வதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி குற்றங்கள் குறித்து முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் மிகவும் கவலையளிப்பதாகவும் இந்த பாரதூரமான நிலைமை குறித்து அனைத்து துறைகளும் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

பாதாள உலகத்தினர் தலைதூக்கியிருப்பதாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அதற்கான முதன்மையான பொறுப்பு சட்டமும் ஒழுங்கும் அமைச்சுக்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பில் அத்துறையிலுள்ளவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் அவ்வாறல்லாதபோது அது குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
நீதியமைச்சினால் நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வத்தளை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு 275 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

இரண்டு மாடிகளைக்கொண்ட இந்த புதிய கட்டிடத் தொகுதி மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றங்களை கொண்டுள்ளதுடன் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ அறை பதிவறை சட்டத்தரணிகளுக்கான கடமை மற்றும் ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்து நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்துவைத்த ஜனாதிபதி நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் சுமுக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அமைச்சர்களான தலதா அதுகோரள, ஜோன் அமரதுங்க, பிரதம நீதியமைச்சர் பிரியசாந் டெப், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment