அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
கொரிய நாட்டின் பிரிவினைக்கு பிறகு வடகொரியாவும், தென் கொரியாவும் எதிரும் புதிருமாக இருந்தன. தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில் 65 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யங் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சமீபத்தில் சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பரவலை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்வதாக அறிவித்தனர்.
கொரிய பிராந்தியத்தில் அமைதியை மட்டுமே விரும்புவதாக மூன் ஜே இன் கூறியுள்ளார். அதற்காக வடகொரியாவிடம் தொடர்ந்து இணக்கமான போக்கை கடைபிடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இரு கொரிய நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிய நிகழ்வை உலகமே உற்று நோக்கியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் அனைத்துக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் காரணம் என தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் எடுத்துள்ள இந்த சீரிய முயற்சிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தென் கொரிய அதிபருடன் ஆன சந்திப்புக்கு பிறகு தற்போது உலக நாடுகளின் கவனம் வடகொரிய அதிபருக்கும் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து திரும்பியுள்ளது. அவர்கள் இருவரும் வருகிற மே அல்லது ஜூன் மாதத்தில் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment