அமைச்சு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான பணிகள் தொடரும் என தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கான சேவையை தொடர்ந்தே செய்து கொண்டு வரும் இதற்கு அமைச்சு பதவி தான் வேண்டும் என்பது இல்லை.
அமைச்சு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான பணிகள் தொடர்ந்து வரும் என்பதை கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.
கொட்டகலையில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மே 01 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினமான மே தினத்தை கொண்டாடுகின்றார்கள். அதேபோன்று இ.தொ.காவும் கொட்டகலையில் மேதினத்தை விமர்சையாக கொண்டாடியது.
இலங்கையில் வெசாக் பண்டிகை காரணமாக எதிர்வரும் 7ஆம் திகதி மே தின விழாவை அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் கேட்டிருந்தது. பௌத்த மத பண்டிகை நிகழ்வுக்காக மரியாதை கொடுத்துள்ள இ.தொ.கா எதிர்வரும் 7ஆம் திகதி மே தின நிகழ்வை பேரணியுடனும், பொது கூட்டத்துடனும் நுவரெலியாவில் நடத்தவுள்ளது.
அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு அமைச்சு பதவி கிடைக்குமா? அல்லது தருவதாக கூறியிருக்கின்றார்களா? என ஊடகவியலாளர் கேட்டபோது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கு சேவை செய்ய அமைச்சு பதவி தான் வேண்டும் என்பதை எதிர்பார்த்து இதுவரையும் மக்களுக்கு சேவை செய்யவில்லை.
மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து வருவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் இதற்கு ஒரு சான்றாக அமைந்திருந்தது என சுட்டிக்காட்டி பதிலளித்தார்.
No comments:
Post a Comment