அஷ்ஷைக் முஜாஹித் யாஸீன் ஸலபீ-மதனீ அவர்கள் குருநாகல் மாவட்டத்தில் இயற்கை வளங்களால் அழகாக காட்சியளிக்கும் பன்னவ எனும் ஊரை பிறப்பிடமாகக் கொண்டவர்.
மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்த ஷைக் அவர்கள் தனது பாடசாலைக் கல்வியை பன்னவ பாடசாலையிலும், மார்க்கக் கல்வியை பரகஹதெனியாவில் சிறந்து விளங்கும் கல்லூரியான தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கலாசாலையிலும் கற்று ஆலிமாக பட்டம் பெற்று வெளியேறினார்.
தொடர்ந்து அக்கல்லூரியில் சில வருடங்கள் மாணவர் மேற்பார்வையாளராக கடைமையாற்றிய வேளையில் மதீனா-இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். கல்விக்கும் கல்விசார் அறிஞர்களுக்கும் முக்கியத்துவமளிக்கும் ஷைக் அவர்கள் மார்க்கத்தை நன்கு விளங்கும் பொருட்டு ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான பீடத்தில் நான்கு வருடங்கு சிறப்புக் கற்கையை மேற்கொண்டு மிகச் சிறந்த பெறுபேறுகளுடன் கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
கல்வியில் மேலெழுந்த ஆசை ஷைக் அவர்களை இத்துடன் நிறுத்திவிடவில்லை, மாறாக பட்டப்பின் படிப்பில் கால் பதித்த ஷைக் இஸ்லாமி அழைப்புப் பணித் துறை சார்ந்த கற்கையை நிறைவு செய்து PDGE பட்டம் பெற்றார். மேலும் தனது கல்விப் பயணத்தை ஹதீஸ் துறையில் தொடர ஆரம்பித்த ஷைக் முதுமாணி கற்கைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து தெரிவாகி ஓர் சிறந்த ஆழமான தலைப்பில் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு இன்று 01/05/2018 செவ்வாய்க்கிழமை ஹதீஸ் துறையில் ஆழ்ந்த அறிவு பெற்ற மூவர் கொண்ட ஆய்வுக் குழுவினர் முன்னிலையில் ஆய்வு கலந்துரையாடப்பட்டு இறுதியில் இச்சிறந்த ஆய்வுக்கு முதல் தர சிறந்த பெறுபேறு கொடுக்கப்பட்டு நடுவர்களால் கௌரவிக்கப்பட்டதோடு இவ்வாய்வு பல்கலைக்கழகத்தினால் புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியிடவும் பணிப்புரையும் செய்யப்பட்டது.
மேலும் ஷைக் அவர்களது வீடு முழுமையாக புத்தகங்களால் ஓர் நூல் நிலையமாக காட்சியளிப்பதைக் காணுகையில் உண்மையில் ஷைக் அவர்களது கல்வித் தாகத்தையும் அதன் மீது தமக்குள்ள அதீத ஈடுபாட்டையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. எங்கும் எப்பொழுதும் கைகளில் ஒன்று அல்குர்ஆன் இல்லையேல் ஏதேனுமொரு நூலுடன் காட்சியளிக்கும் ஷைக் உண்மையில் பாராட்டத்தக்கவர் எனில் ஒரு போதும் மிகையாகாது.
ஆழ்ந்த அறிவும், மக்களுடன் நல்லமுறையில் பழகும் சிறந்த நற்புண்களும் தன்னகத்தே கொண்ட ஷைக், கல்வி கற்க தம்மிடம் வருவோரை மதித்து மிகத் தெளிவாக அவர்ரகளுக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எச்சபையிலும் தன்னை யாரென்று அடையாளம் காட்டாது தனது பணிவுத் தன்மையின் வெளிப்பாட்டால் ஏனையோர் முன்னிலையில் இலைமறை காயாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தகைய அறிஞர் உண்மையில் மதிக்கப்படத்தக்கவராவார்.
ஷைக் அவர்கள் மதீனா-இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இலங்கை மாணவர் ஒன்றியத்தின் மற்றொரு பிரிவான அழைப்புப் பணி குழுவின் முன்னாள் தலைவராக விளங்கியவர் மட்டுமல்லாது சிறந் மொழிநடையுடன் தெளிவாக பேசும் ஓர் பேச்சாளராவர், மக்கள் மற்றும் மாணவர்கள் ஷைக் அவர்களது பேச்சை ரசனையுடன் கேட்பதற்காக காத்திருந்த நிகழ்வு இன்றும் எம் கண் முன்னே தோன்றுகிறது.
ஷைகின் மதிப்பையும் அவரது கல்வித் தகைமைகளையும் கருத்திற்கொண்டு ஊர் மக்களாகிய பன்னவ உறவுகள் ஷைகை இயன்றளவு தங்களது ஊரில் மார்க்க விடயங்களுக்காகவும் சமூகப் பணிக்காகவும் ஈடுபடுத்தி பயன்படுத்திக் கொள்வதே நன்று ஏனெனில் முற்றத்து மல்லிகை ஒரு போதும் மணக்காது.
கல்விக்கும் மார்க்க விடயங்களுக்கும் முக்கியத்துவமளித்து, வயதில் குறைந்தவர்கள், மூத்தவர்கள் அனைவரையும் மதித்து புரிந்துணர்வுடன் பழகும் அஷ்ஷைக் முஜாஹித் ஸலபீ-மதனீ அவர்களை வல்லவன் அல்லாஹ் பொருந்திக் கொள்வதோடு, மேலும் கல்வியிலும் வாழ்வின் சகல படித்தரங்களிலும் முன்னேற்றமடைந்து சீரும் சிறப்புமாக வாழ அருள் புரிவானாக! ஆமீன்
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
01/5/2018
No comments:
Post a Comment