பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தரப்பொன்றும் ஆதரவு வழங்கவுள்ளன. பிரதமரும் அவருடன் இருப்பவர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு எவ்வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் அது வெற்றியளிக்கப்போவதில்லை. எனவே பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலமையிலான அரசாங்கத்தின் இறுதித் தினம் நாளையாகும் என்று கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக தமது ஆணையை வழங்கினர். அதனை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளது. எனவே எதிர்வரும் நான்காம் திகதி சூரியன் மறைவதும் ஐந்தாம் திகதி சூரியன் உதிப்பதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் தோல்வியை பறைசாற்றிக்கொண்டாகும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
தற்போது பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைகிறது. வடக்கு தெற்கு என சகல பிரதேசங்களிலும் சட்டம் செயலிழந்து போயுள்ளது. எப்போதுமில்லாதவாறு பாதாள உலக்க குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆகவே நாட்டில் உரிய நிர்வாகம் இல்லை. உரிய நிர்வாகம் இல்லாத நிலையில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
எனவே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிர்க்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தரப்பொன்றும் ஆதரவு வழங்கவுள்ளது. ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதிவியிலிருந்து செல்லும் காலம் வந்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment