பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதாக வெளிக்காட்டப்பட்டாலும் சுதந்திரக் கட்சியைப் பிரிப்பதே அதன் உள்ளார்ந்த நோக்கமாக இருந்தமை நிரூபணமாகியிருப்பதாக அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, விஜித் விஜிதமுனி சொய்சா மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் நேற்று தெரிவித்தனர்.
எது எவ்வாறாயினும் 41 உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றாக இணைந்திருந்து சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவது உறுதியென்றும் அவர்கள் கூறினர். சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர்கள் இவ்வாறு கூறினர்.
பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி முற்றிலும் நடுநிலைமையே வகித்தார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரும்பியவாறு செயற்படுவதற்கு ஜனாதிபதி பூரண சுதந்திரமளித்திருந்தார்.அவர் எவரையும் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்குமாறோ அல்லது பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்குமாறோ உத்தரவு பிறப்பித்திருக்கவில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, "என்னை இதனுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்.
நான் இவ்விடயத்தில் பக்கச்சார்பாக செயற்பட விரும்பவில்லை. இப்பிரேரணை வென்றாலும் வெல்லாவிட்டாலும் நாம் மறுநாள் 05 ஆம் திகதி முதல் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். என்றாலும் சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதே சிறந்தது " என ஜனாதிபதி கூறியிருந்ததாகவும் விளக்கமளித்தார்.
இதேவேளை, "ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டில் கூடியபோதும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பதாகவே ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் சிலர் வாக்களிப்பின்போது தமது நிலைப்பாட்டை மீறி பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்துள்ளனர்.
உண்மையில் இது பிரதமரை தோற்கடிக்கச் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பிரேரணையல்ல.சுதந்திரக் கட்சியை பிரிக்கும் எண்ணத்தில் கொண்டுவரப்பட்டதேயாகும். என்றாலும் நாம் இதற்காக கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லை "என்றும் அமைச்சர் சமரசிங்க கூறினார். கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் சமரசிங்க மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் எவ்வித நிலைப்பாட்டையும் அறிவித்திருக்காமையினால் அரசாங்கத்திலிருந்து கொண்டு பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவ்வாறு வாக்களித்தவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றிய பின்னர் புதிய அமைச்சரவையொன்றை அமைப்பதா? இல்லையா ? என்ற தீர்மானத்தை நாட்டுத் தலைவர்களான ஜனாதிபதியும் பிரதமருமே முன்னெடுப்பார்கள். அதுபற்றி கருத்து கூறுவதற்கு எம்மால் முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்திலிருந்து கொண்டு எம்மால் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென்பதில் நானும் உறுதியாக இருந்தேன். ஐ.தே.க அதனை மறுக்கவும் நாம் அனைவரும் அந்த கோரிக்கையை கைவிட்டுவிட்டோம்.ஐ.தே.க தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக வெளியான தகவல்கள் காரணமாகவும் சிலர் பிரேரணைக்குச் சார்பாக வாக்களித்தனர் எனக் கூறினார்.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகையில்,
இப்பிரேரணையில் பிரதமர் தோற்கடிக்கப்பட்டால் அதற்குப் பின்னர் யார் பிரதமர் என்ற தெளிவான கருத்து முன்வைக்கப்படாததன் காரணமாகவே பலர் பிரேரணையை ஆதரிக்கவில்லையென்றும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment