சீனாவின் அதிபர் இரு முறைக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்னும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் சீனாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒருமுறை இந்த பதவியை வகித்தவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடலாம்.
ஆனால், பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் அடுத்து மூன்றாவது முறையாக தேர்தல்களில் போட்டியிட கூடாது என அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்துகிறது.
சீனாவின் அதிபராக தற்போது பதவி வகித்துவரும் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டு சீனாவின் ஆளும்கட்சி தலைவராகவும், அந்நாட்டின் அதிபராகவும், முப்படைகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
சீனாவின் மிகவும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த தலைவராக அந்நாட்டின் ஆளுங்கட்சி ஜி ஜின்பிங்-கின் பெயரை கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது. தனது பதவிக்காலத்தில் முதல் ஐந்தாண்டுகளை விரைவில் நிறைவு செய்யும் ஜி ஜின்பிங் விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதற்கிடையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை குழு மாநாடு நாளை பீஜிங் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ‘பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் அடுத்து மூன்றாவது முறையாக அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் போட்டியிட கூடாது’ என்னும் நிபந்தனையை நீக்கம் செய்யப் போவதாக கட்சி மேலிடம் கடந்த வாரம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் அதிபர் இரு முறைக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்னும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.
இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் 2022-ம் ஆண்டையும் கடந்து ‘அசைக்க முடியாத சக்தியாக’ தனது வாழ்நாள் முழுவதும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment