அட்டப்பள்ளம் இந்து மயான ஆக்கிரமிப்பால் அம்பாறை மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொந்தளித்துள்ளனர். இச்செயற்பாடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை நிந்தவூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் மயான பூமி அபகரிப்பு முறுகல் நிலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில். அட்டப்பள்ளம் கிராமம் முற்றிலும் தமிழர்கள் வாழ்ந்த பழம்பெரும் பிரதேசம். இவ்வாறு பரம்பரையாக இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற வன்செயல் நடவடிக்கையின் காரணமாக கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆயினும் பல குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேறாது இன்று வரை வாழ்ந்து வருகின்றனர் அதேபோல் கிராமத்தின் கடற்கரையை அண்டியதான பிரதேசத்தில் அமைந்துள்ள காணியை சோழர் காலம் தொடக்கம் மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மயானத்தைக் கூட விட்டு வைக்கமுடியாது மனிதாபிமான மற்ற ரீதியில் மயானத்தையும் தனது பூமி எனக் கூறி அதனைப் பெறுவதற்கு கடந்த பல வருடகளாக ஒருவர் முயற்சிக்கின்றார். பிரேதங்கள் புதைக்கப்பட்ட புதை குழிகளுக்கு மேலாக வேலியைப் போட்டு மனச்சாட்சி அற்ற செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளார்.
மக்களின் பல எதிர்ப்புக்கு மத்தியில் அவரது முயற்சி நிறைவுறாத நிலையில் சமரசப்பேச்சு வார்த்தை என மக்களை அழைத்த நிந்தவூர் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர், உள்ளிட்டவர்கள் அட்டப்பள்ளத்துக்கு சென்று ஆலய தலைவர் உள்ளிட்ட மக்களை அழைத்து பேசியுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தியோகத்தர்கள் எவரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதராத நிலையில் காணி தொடர்பிலான பிணக்கைத் தீர்க்க அதிகாரமில்லாத உதவிப்பிரதேச செயலாளர் அழைத்த போது தமது மயானத்தை விட்டுக்கொடுக்க முடியாது எனக் கூறிய மக்கள் எதிர்ப்பினை வெளியிட்ட நிலையிலேயே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த 23 அப்பாவித் தமிழ் மக்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஆகவே ஜனாதிபதி, பிரதமர் நல்லிணக்க அமைச்சு உள்ளிட்டவர்கள் இவ்விடயம் தொடர்பில் தலையீடு செய்து கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்வதுடன், தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இல்லையேல் அம்பாறை மாவட்டம் மட்டுமல்லாது இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment