தற்கொலை செய்துகொள்வதற்காக எடுத்துச் சென்றபோதே குண்டு தவறி வெடித்ததாக தியத்தலாவ - கஹகொல்ல பகுதியில் பஸ் வண்டியினுள் வெடித்த கைக்குண்டை எடுத்துச் சென்றதாக கூறப்படும் கஹகொல்ல இராணுவ முகாமில் சேவையாற்றும் சார்ஜண்ட் மேஜர் தர இராணுவ வீரர் பொலிஸாருக்கு வாக்கு மூலமளித்துள்ளார்.
தியத்தலாவ வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் குறித்த சார்ஜண்ட் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே நேற்று முன்தினம் மாலை அவரிடம் விஷேட பொலிஸ் குழு, வைத்தியசாலையில் வைத்து முன்னெடுத்த விசாரணைகளில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தான் பலரிடம் 10 இலட்சம் ரூபாவுக்கும் மேல் கடன் வாங்கியுள்ளதாகவும், அந்த கடன் தொகையை அவர்கள் திரும்ப கேட்கும்போது தன்னால் அதனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் நிலவிய நிலையிலேயே தற்கொலை தொடர்பில் தீர்மானமெடுத்து குண்டை முகாமுக்கு எடுத்துச் சென்றதாகவும், முகாமில் வைத்து தற்கொலை செய்துகொள்வதே திட்டமாக இருந்தபோதும் குண்டு இடையில் தவறுதலாக பஸ் வண்டியிலேயே வெடித்துவிட்டதாகவும் அவரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் வட பகுதியில் சேவையாற்றும்போது குறித்த கைக்குண்டு தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும், அது நல்ல நிலையில் இருக்கவில்லை எனவும் அவர் வாக்கு மூலத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த சார்ஜண்ட் மேஜர், இயந்திர பொறியியல் படையணியின் கஹகொல்ல முகாமின் ஆயுத களஞ்சியத்துக்கு பொறுப்பாக செயற்பட்டவர் எனவும் அவர் விடுமுறைக்காக வீடு சென்று குறித்த தினம் கஹகொல்ல முகாமுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போதே குண்டை உடன் எடுத்து வந்துள்ளமையும் இதுவரையிலான பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
அதன்படி பஸ்ஸில் வெடித்த குண்டு தியதலாவ - கஹகொல்ல முகாமுக்குள் எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே குறித்த சார்ஜண்ட் மேஜரினால் உடன் கொண்டு செல்லப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. மாத்தளையைச் சேர்ந்த குறித்த சார்ஜண்ட் மேஜர் தர வீரர், விடுமுறைக்கு சென்றுவிட்டு மீள முகாமுக்கு யாழில் இருந்து தியத்தலாவ நோக்கி பயணிக்கும் பஸ்ஸில் வந்துள்ளதுடன், கண்டியில் வைத்து அன்றைய தினம் அதிகாலை 1.05 மணிக்கு அவர் பஸ்ஸில் ஏறியுள்ளார்.
பஸ் மாற்றப்பட்டு தியத்தலாவை நோக்கி சென்ற மற்றைய பஸ்ஸுக்கு பண்டாரவளையில் வைத்து ஏற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பஸ் வண்டியில் சாரதி இருக்கை பக்கமாக 3 ஆவது நிரலில் 3 ஆசனம் கொண்ட தொகுதியில் அவர் நடுவில் அமர்ந்துள்ளார். அவரது வலது புறத்தில் கஹகொல்ல முகாமில் சேவையாற்றும் இலிகிதர் ஒருவரும் இடது புறத்தில் இராணுவ பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரும் இருந்துள்ளனர்.
யாழ். - பண்டாரவளை பஸ்ஸில் கண்காணிப்பு கமரா இருந்த நிலையில் அதன் காணொளிகளை சோதித்துள்ள பொலிஸார் குறித்த சார்ஜண்ட் மேஜர் ஒருவகையான பதற்றத்துடனேயே பஸ்ஸில் பயணித்ததை அவதானித்துள்ளனர். அத்துடன் எரிந்த பஸ்ஸிலும் கண்காணிப்பு கமரா இருந்துள்ள நிலையில் குண்டு வெடிப்பு தொடர்பில் உறுதி செய்ய அந்த காணொளிகளை மீளப்பெறும் பொருட்டு நீதிமன்ற அனுமதியுடன் அது தொடர்பிலான கருவிகள் மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கஹகொல்ல முகாம் அருகே இறங்கும் நோக்கத்துடன் இலிகிதருடன் குறித்த சார்ஜண்ட் மேஜர் தயாராகியுள்ளார். இதன்போது அவரது தொலைபேசி கீழே விழுந்துள்ளதுடன் அதனை எடுக்க முற்பட்டபோது மடியில் இருந்த பையில் இருந்தே குண்டு வெடித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment