தலிபான் அமைப்பினரால் சுடப்பட்ட மலாலா 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த கிராமமான சுவாத் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துள்ளார். பாகிஸ்தானின் சைபர் பக்துன்கவா மாகாணத்தில் சுவாத் மாவட்டத்தில் மின் சோரா பகுதியில் மகான் பாக் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டில் தனது 14 வயதில் பெண் கல்விக்காக போராடிய போது தலிபான் அமைப்பினரால் சுடப்பட்டார். உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். அவருக்கு சமாதானத்துக்கான நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது. தற்போது 20 வயதாகும் அவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.
இதற்கிடையே தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு அவர் வந்துள்ளார். அங்கு ஒரு டி.வி.க்கு அளித்த பேட்டியில் தனது படிப்பு முடிந்ததும் பாகிஸ்தானுக்கு திரும்பி பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு பாடுபாடுபட போவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று அவர் தனது சொந்த கிராமம் உள்ள சுவாத் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்தார். அவருடன் பெற்றோரும் வந்துள்ளனர். சுவாத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் விடுதியில் அவர் தங்கியுள்ளார்.
மலாலாவுக்கு தலிபான் அமைப்பினரின் அச்சுறுத்தல் இன்னும் உள்ளது. அவர் உயிர் பிழைத்து திரும்பி வந்தால் மீண்டும் அவரது உயிருக்கு குறி வைப்போம் என மிரட்டல் விடுத்து இருந்தனர்.
எனவே அவர் தங்கியிருக்கும் இடத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து இவர் மின்கோரா அருகேயுள்ள தனது சொந்த கிராமமான மகான் பாக்குக்கு செல்கிறார்.
No comments:
Post a Comment