அவன் கார்ட் (Avant Garde) மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான நிதி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ், முன் வைத்த கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் கொழும்பு நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவன் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமாக அரசாங்கத்திற்கு ரூபா 1,140 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கானது, டில்ருக்ஷி டயஸினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் எழுத்து மூல அனுமதியின்றி தாக்கல் செய்யப்ப்டடுள்ளதாகவும், அவரது நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவித்து தன்னை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோத்தாபய ராஜபக்ஷவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் அதன் பணிப்பாளர் நாயகமும் ஒன்றாகவே கருதப்படும் எனத் தெரிவித்த நீதிமன்றம், ஆணைக்குழுவின் பணிப்பாளர் அல்லது அவ்வாணைக்குழு சார்பாக எவரேனுமொருவர் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அந்த வகையில் குறித்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும், கொழும்பு நீதவான் நீதிமன்ற நடவடிக்கைள் சரியான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment