வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம்களின் எதிரிதான் அல்ல என்றும், தனக்கெதிராக திட்டமிட்ட சில தரப்புகளால் போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் முன்னாள் பிரதியமைச்சரும், புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான பாயிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று (2) நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார் அவர் இதுகுறித்து மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் தெலைக்காட்சியொன்றில் நான் குறிப்பிட்ட கருத்துக்களை வெட்டியெடுத்து, அதன் ஒருபகுதியை சமூக ஊடகங்களில் பதிவேற்றி நான் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரானவன் அல்லது அவர்களை கொச்சைப்படுத்தி விட்டேன் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.
இதற்கு வடக்கு முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் வடக்கு முஸ்லிம்களின் எதிரியல்ல. புத்தளம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை கிளறவிட்டு, சிலர் அதில் குளிர்காய முயன்றாலும் இதுகாலவரையும் புத்தளத்தில் உள்ள வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு வன்முறைச் சம்பவமும் நிகழ்வில்லை.
இந்த பாயிஸ் உயிரோடு இருக்கும்வரை புத்தளத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொன்று வன்முறைச் சம்பவம் நடைபெறவும் அனுமதிக்கமாட்டான் என்பதை மிகத்தெளிவாக கூறிவைக்க விரும்புகிறேன்.
புத்தளத்தில் உள்ள வடக்கு முஸ்லிம்களை நான் சகோதர சகோதரிகளாகவே நோக்குகிறேன். அவர்களை மதிக்கிறேன். எந்தவித பாரபட்சமும் இன்றி அவர்களுக்காகவும் பணியாற்றுகிறேன். எதிர்காலத்திலும் அவர்களுக்கான எனது சேவைகள் தொடரும்.
புத்தளம் விஞ்ஞானக் கல்லூரி என்னால் உருவாக்கப்பட்டது. அதன் பயனை புத்தளத்திலுள்ள வடக்கு முஸ்லிம்களும் நுகர்கின்றனர். எனது பிரதேசவாதமற்ற செயற்பாட்டுக்கு இது உதாரணம் எனவும் பாயிஸ் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment