நாட்டில் தேசிய நல்லிணக்கம், இன ஒருமைப்பாடு, சமத்துவம் என்பவற்றை உறுதி செய்யும் வகையில் நம்நாட்டின் சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டின் 70 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் கூட்டாகப் போராடி நம்நாட்டுக்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்தனர். “சிறுபான்மைச் சமூகங்களின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் அமைதியான, சமாதான சூழலில் எமது நாட்டின் 70 ஆவது தேசிய சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.
ஏகாதிபத்திய நாடுகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக பெரும்பான்மை சிங்கள சமூகத்தினருடன் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரும் இணைந்தே போராடினர். எனினும் அதன் மூலம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் காலத்திற்கு காலம் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களினால் சிறுபான்மையினர் பல்வேறு வகையிலும் நசுக்கப்பட்டு அவர்களது உரிமைகள், அபிலாஷைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளன.
இருந்தபோதும் "எமது நாட்டை பொருத்த மட்டில் எப்போது சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள் உறுதி செய்யப்பட்டு, இன சமத்துவம் பேணப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.
ஆகையினால் சிறுபான்மைச் சமூகங்கள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எமது தாய் நாடு வளம் பெறவும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வெற்றி கொள்வதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment