கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணை - ஒத்துழைக்க மறுக்கும் சீனா - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணை - ஒத்துழைக்க மறுக்கும் சீனா

கொரோனா வைரஸின் உருவாக்கம் குறித்து மேலும் விசாரிக்க உலக சுகாதார நிறுவனம் முன் மொழிந்த திட்டத்தை சீனா நிராகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் உருவாக்கம் குறித்த விசாரணையில் சீனா அதிக ஒத்துழைப்பை தர வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மேலதிக விசாரணையில் சீன ஆய்வகங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு சீனா மறுத்துள்ளது.

இது குறித்து பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய சீன சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின், உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை முதன்முதலில் படித்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். சில அம்சங்களில், கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய அடுத்த கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டம் பொது அறிவை மதிக்கவில்லை. அது அறிவியலுக்கு எதிரானது. அத்தகைய திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 இன் தோற்றம் குறித்த அதன் விசாரணையிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஒரு ஆரம்ப அறிக்கையை வெளியிட்டது.

அதில் வைரஸ் 2019 டிசம்பரில் மனிதர்களுக்கு பரவுவதற்கு முன்பு ஒரு விலங்கினத்தில் தோன்றியிருக்கலாம் என்று தீர்மானித்தது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இம்மாதம் சீனாவில் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து இரண்டாம் கட்ட ஆய்வுகளை முன்மொழிந்ததுடன், வுஹான் நகரில் உள்ள ஆய்வகங்கள் மற்றும் சந்தைகளின் தணிக்கை உட்பட, அதிகாரிகளிடமிருந்து வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்தது.

முதன்முதலில் அறியப்பட்ட கொவிட் வைரஸ் மத்திய சீன நகரமான வுஹானில் 2019 டிசம்பரில் வெளிவந்தன. நகர சந்தையில் உணவுக்காக விற்கப்படும் விலங்குகளிடமிருந்து இந்த வைரஸ் மனிதர்களிடம் குதித்ததாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment