மீராவோடை, மாஞ்சோலை தனிமைப்படுத்தல் பதினான்கு நாட்களுக்கு நீடிக்கும் - மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

மீராவோடை, மாஞ்சோலை தனிமைப்படுத்தல் பதினான்கு நாட்களுக்கு நீடிக்கும் - மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

ஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.மு.சதீக்

மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலைக் கிராம சேவையாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் காலம் பதினான்கு நாட்களுக்கு நீடிக்கும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.  

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை மற்றும் சுகாதார பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு, மாஞ்சோலைக் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே குழப்பகரமான நிலைமைகள் காணப்பட்டதனை அவதானிக்கலாம். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்   மட்டக்களப்பு மாவட்டத்தில் வருகின்ற கெரோனா நோய்த் தொற்றாளர்களை வைத்து முதலில் அப்பிரதேசத்தினை வரைபடத்தில் குறிக்கப்படுவதாகவும், பின்னர் அவர்களிடைய முதல் தொடர்பாளர்கள் அடையாளம் தெரிந்து அவர்களின் குடும்பங்கள் உறவினர்களுக்குள் இருந்தால் அதனை ஒரு தொகுதியாகவும் தொற்றாளர்களுக்கு தான் எங்கிருந்து இந்த தொற்றினைக் கொண்டு வந்தோம் என்று தெரியா விட்டால் அதாவது கெரோனா தொற்றின் முதல் தொடர்பு நபர் தெரியா விட்டால் இந்த நோய் எங்கிருந்து காவு கொள்ளப்படுகின்றது என்று தெரியா விட்டால் அதனை செவைலன்ஸ் என்ற இரண்டாம் தொகுதியாகவும் பிரிக்கப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.

இந்த அடிப்படையில் மீராவோடை, மாஞ்சோலை பிரதேசத்தில் பரவி வருகின்ற கொரோனா இரண்டாம் தொகுதிக்குரியதெனவும், அவர்கள் எங்கிருந்து காவினார்கள் அல்லது முதல் தொடர்புடைய முதல் தொற்றாளர் யார் என்று கண்டுபிடிப்பது கடினம் என்ற காரணத்தினாலும் மற்றும் சுகாதாரப் பணிமனையின் வரைபடத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் இந்த மூன்று கிராம சேவையாளர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த தனிமைப்படுத்தல் பதினான்கு நாட்களுக்கு நீடிக்குமெனவும், அப்போது கொரோனாவுக்குரிய பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தால் மாத்திரம் இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் நீக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பி எமது பிரதேசத்தில் அலட்சியமாக நடந்து கொள்ள வேண்டாம். கொரோனா மரணங்களை அதிகரிப்பதனைக் கட்டுப்படுத்துவதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். இதனை அரசியல் ரீதியான கண்ணோட்டத்திலோ அல்லது வேறு பிரதேசங்களோடு ஒப்பிட்டோ எமது பிரதேச மக்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியப் போக்காக மாற்றாமல் எமது பிரதேசத்தினை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஒவ்வொரு குடிமகனுக்குமுண்டு.

மீராவேடை, மாஞ்சோலை பிரதேசங்களில் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் ஏனைய தொழில்களில் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களை அவர்களின் தொழில் தளங்களுக்கு எவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனுப்பலாம் என்ற கலந்தாலோசனை செய்வதற்காக ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரும் அகீல் டயர் கடை உரிமையாளருமாகிய அல்ஹாஜ் ஏ.சீ.எம்.நியாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் வர்த்தகருமாகிய எம்.ஹலால்தீன் ஆகியோர் உயர் மட்டங்களோடு கலந்தாலோசனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment