டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஒரு வாரத்திற்குள் இரண்டாது முறையாக ஒக்சிஜன் தீர்ந்துபோயிருக்கிறது.
கொரோனா வைரசின் கொடூர தாக்குதல் நாட்டின் சுகாதார கட்டமைப்பை நிலைகுலையச் செய்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. ஒக்சிஜன் பற்றாக்குறையை போக்க அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளும் உதவி செய்துள்ளன.
எனினும், மருத்துவமனைகளுக்கு அந்த ஒக்சிஜன் சென்று சேருவதற்குள் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வகையில், டெல்லி பத்ரா மருத்துவமனையில் இன்று ஒக்சிஜன் தீர்ந்துபோனதால், தீவிர சிகிச்சையில் இருந்த ஒரு வைத்தியர் உள்ளிட்ட 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி மருத்துவமனை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ‘சரியான நேரத்தில் எங்களுக்கு ஒக்சிஜன் கிடைக்கவில்லை. மதியம் 12 மணிக்கு ஒக்சிஜன் தீர்ந்துபோனது. அதன் பின்னர் 1.35 மணிக்கு ஒக்சிஜன் கிடைத்தது. எனவே, எங்கள் வைத்தியர்களில் ஒருவர் உட்பட 8 பேரை இழந்துவிட்டோம்’ என மருத்துவமனை தெரிவித்தது.
பத்ரா மருத்துவமனையில் ஒரு வாரத்திற்குள் இரண்டாது முறையாக ஒக்சிஜன் தீர்ந்துபோயிருக்கிறது. கடந்த மாதம் 24ம் திகதியும் இதேபோன்று ஒக்சிஜன் தீர்ந்துபோனது. ஆனால், ஓரிரு நிமிடங்களுக்குள் ஒக்சிஜன் சப்ளை கிடைத்துவிட்டது. இதனால் பல உயிர்கள் ஆபத்தில் இருந்து தப்பின.
No comments:
Post a Comment