அரச உத்தியோகத்தர்கள் அனுமதியின்றி ஊடகத்துறையில் பணிபுரிவதாக குற்றச்சாட்டு - அரசாங்கத்தினால் வடக்கு அபிவிருத்திகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 20, 2021

அரச உத்தியோகத்தர்கள் அனுமதியின்றி ஊடகத்துறையில் பணிபுரிவதாக குற்றச்சாட்டு - அரசாங்கத்தினால் வடக்கு அபிவிருத்திகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதில்லை

ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வெகுசன ஊடகத்துறை அமைச்சர கெஹெலிய ரம்புக்வெல்லவின் பங்குபற்றுதலுடன் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் வட மாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் நேற்று (19) மதியம் 12.30 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார்.

Development Division, Fact Check Division, Social Media Division and News Division என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணி உடனுக்குடன் தெரியப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் அரச திணைக்களங்கள் அவற்றின் தனித்தனியான இணைய பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களின் மேம்படுத்தல் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர், ஒரு நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறையினர் சரியான தகவல்களை முறையான வழிமுறையூடாக உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தல் அவசியமானதென குறிப்பிட்டார். 

ஆனால் தற்போது அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அரச தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறுபட்ட செய்திகள் முன்னுக்கு பின் முரணாக திரிவுபடுத்தி பிரசுரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இரு முக்கிய விடயங்களை வெகுசன ஊடகத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த ஆளுநர் தெரிவிக்கையில் சமூக வலைத்தளங்களில் தவறான மற்றும் வதந்திச் செய்திகள் விரைவாக பகிரப்படுவதாகவும் அதனால் வெளிமுதலீட்டாளர்கள் பலர் தமது முதலீடுகளை இலங்கையில் முதலிட தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

அடுத்து மிக முக்கியமாக அரச உத்தியோகத்தர்கள் பலர் அவர்களின் திணைக்கள தலைவர்களின் அனுமதியின்றி ஊடகத்துறையில் பணிபுரிவதாகவும் குறித்த ஊடக நிறுவனங்கள், ஊடக அமைச்சினால் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி தான் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அரசாங்கத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அபிவிருத்தி தொடர்பான தகவல்கள் அரச ஊடகங்களால் கூட பிரசுரிக்கப்படுவதில்லை என பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் அவ் விடயம் தொடர்பில் தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பததாக கூறினார்.

No comments:

Post a Comment