பதவி விலகினார் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

பதவி விலகினார் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் பதவி விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு ஆட்சி செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட கடிதம் இன்றையதினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திடம் கையளிக்கப்பட்டு பிரதேச சபையின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலும் மாற்றம் ஏற்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment