நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் துப்பாக்கியால் சுட்டால் முதல்வர் பதவியை இராஜினாமா செய்வேன் என அக்கட்சியின் தலைவரான சீமான் தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி அன்று தமிழகத்திற்கு சட்டப் பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இதில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கு பற்றிய கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது புரட்சிகர சமூகத்தைப் படைக்க இந்த அரசியலை முன்னெடுக்கிறோம். ஊழல் தெரிகிறது. இலஞ்சம் தெரிகிறது. முறையற்ற நிர்வாகம் தெரிகிறது.
அதை தடுக்க முடியவில்லை. வெளிப்படையாக அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகமாக உள்ளது. மக்களுக்கான அரசை நிறுவுவதற்கு இந்த அரசியலை முன்னெடுக்கிறோம். நாங்கள் உறுதியாக வெல்வோம். உலகில் மக்கள் அவரவர் தாய் மொழியில் பேசுகின்றனர்.
நாங்கள் அந்த மொழிகளின் தாய் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆதி மனிதன் தமிழன்தான். ஆதி மொழியும் தமிழ்தான். தமிழ் எங்கள் மூச்சு மொழி. எங்கள் உயிர். அது எங்கள் தாய். எங்கள் அடையாளம். அந்த மொழி அழிந்து கொண்டிருக்கிறது. எங்கள் தமிழை அழியாமல் செய்ய நாங்கள் உறுதியாக வெல்வோம். மக்கள் எங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
உலக பொதுவிற்கான அரசியலை முன்னெடுக்கிறோம். அரசியல் என்பது அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி நிறுத்தப்பட்டுள்ளது. கொர்ப்பரேட் கம்பனிகள் போல் மாற்றப்பட்டுள்ளன. சில குடும்பங்களில் சொந்த சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை இந்த நிலத்தில் இருந்த அரசியலிலிருந்து நேர் எதிர் திசையில் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது. கடந்த தேர்தல்களில் பண மழை பொழிந்தது. கூட்டணி இணைந்தது. எனினும் 17 லட்சம் பேர் நமக்கு வாக்களித்தனர்.
எத்தனை 'ஜி' வந்தாலும், கஞ்சி விவசாயிதான் ஊற்ற வேண்டும். விவசாயி வாழ முடியாவிட்டால் அது நாடு இல்லை சுடுகாடு. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்கினால் அடுத்தநாளே இராஜினாமா செய்வேன். நாம் கருத்தியல் போரை தொடங்கி உள்ளோம் அதைக் கூறி ஓட்டை பெறுவோம்.'' என்றார்.
234 தொகுதிகளில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி நிறுத்தியுள்ளது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
No comments:
Post a Comment