அ.தி.மு.க. வை காப்பாற்ற விளக்கேற்றி, கண்களை மூடி பிரார்த்தனை செய்யுங்கள் : பன்னீர், எடப்பாடி இணைந்து வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 23, 2021

அ.தி.மு.க. வை காப்பாற்ற விளக்கேற்றி, கண்களை மூடி பிரார்த்தனை செய்யுங்கள் : பன்னீர், எடப்பாடி இணைந்து வேண்டுகோள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி இயக்கத்தை காப்பேன் என உறுதி மொழி ஏற்குமாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் அவர்களும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

பெப்ரவரி 24 ஆம் திகதியன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள். இதை முன்னிட்டு கட்சியின் ‘இரட்டை தலைமை’ என போற்றப்படும் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கூட்டாக கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்கள். 

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ''ஜெயலலிதாவின் ஆன்மா நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. அதேபோல் தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்து ஜெயலலிதாவின் ஆன்மா இந்த இயக்கத்தை காத்து வருவது நம் நம்பிக்கை. 

விலை கொடுத்தோ.. வசைபாடியோ.... வசியப்படுத்தியோ... இந்த இயக்கத்தை வாங்க முடியாது. எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக்கொண்டு நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளனர்.

மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24ஆம் திகதியன்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணியளவில் தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ‘உயிர் மூச்சு உள்ளவரை ஜெயலலிதாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அ.தி.மு.க இயக்கத்தையும் காப்பேன் இது ஜெயலலிதாவின் மீது ஆணை என்ற உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

நூறு ஆண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து கோட்டையில் நம் கொடியை உயரப் பறக்க செய்வோம்.'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க வின் தொண்டர்களுக்காக எழுதப்பட்ட இந்த கடிதத்தில், 'அ.தி.மு.க வை காக்க விளக்கேற்றுங்கள்' என்று கேட்டுக்கொள்வது, பிரதமர் மோடி, கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை நினைவுபடுத்துகிறது என்றும், இதன் மூலம் அ.தி.மு.க வை, பா. ஜ. க எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை உணர முடிவதாகவும் எம்.ஜி.ஆரின் நிஜமான விசுவாசிகள் இணையத்தில் கருத்துகளை பதிவிட்டிருப்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment