வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகர் கொன்ராட் வின்சென்ட் மெடெரிக் விடைபெறும் நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகர் கொன்ராட் வின்சென்ட் மெடெரிக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை வெளிநாட்டு அமைச்சில் வைத்து 2021 08ஆம் திகதி சந்தித்தார்.
இலங்கைக்கான சீஷெல்ஸின் முதலாவது உயர் ஸ்தானிகராக, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளிலான ஜனாதிபதியின் விஜயங்கள் உட்பட இலங்கை - சீஷெல்ஸ் உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பான மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை மேற்கொண்டமைக்காக வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார்.
பல்தரப்பு மற்றும் சர்வதேச அரங்குகளில் இலங்கைக்கு சீஷெல்ஸ் அளித்த உறுதியான ஆதரவை ஒப்புக் கொண்ட அதே வேளையில், வர்த்தகம், விவசாயம், மருத்துவம், சுற்றுலா, நீலப் பொருளாதாரம், விருந்தோம்பல், நிதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சீஷெல்ஸ் ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சரின் இலங்கை மக்களுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் மெடெரிக், இலங்கை மற்றும் சீஷெல்ஸ் இடையேயான பலனளிக்கும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.
கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சுற்றுலா போன்ற பல துறைகளில் இலங்கையின் தொழில் வல்லுநர்களுக்கும், சீஷெல்ஸில் உள்ள திறன் தொழிலாளர்களுக்கும் திறந்திருக்கும் வாய்ப்புக்களையும் உயர்ஸ்தானிகர் விளக்கினார்.
சீஷெல்ஸின் பல மக்கள் ஆண்டுதோறும் பயனடைகின்ற இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் சுகாதாரத் தொழில்களால் வழங்கப்படும் சேவைகளின் நிலை குறித்து உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.
சீஷெல்ஸ் மக்களுக்கான மருத்துவச் சுற்றுலாவை மீண்டும் ஆரம்பிப்பதாக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தூதுவருக்கு உறுதியளித்தார்.
கோவிட்-19 தொற்று நோய், கடல்சார் பாதுகாப்பு, ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றங்கள் உள்ளிட்ட பரஸ்பர நலன்களின் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை வெளிநாட்டு அமைச்சரும், உயர்ஸ்தானிகரும் பரிமாறிக் கொண்டனர்.
கோவிட் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதாரத் தடைகளின் காரணமாக கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டுள்ள போதிலும், கொழும்பில் தூதுவரை நியமிப்பதற்கு அனுமதி கோரி உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அமைச்சருக்கு கடிதமொன்றை வழங்கினார்.
இந்து சமுத்திர நாடுகளாக இரு தரப்பினரும் எதிர்வரும் ஆண்டுகளில் ஒத்துழைப்பின் புதிய பகுதிகளைத் தழுவி தற்போதுள்ள உறவுகளை பலப்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டனர்.
No comments:
Post a Comment