நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று விரும்புவமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக்கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முன்னணியில் இருப்பதாக தெரிவித்த பிரதமர், சட்ட தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், பிரச்சினைகளை திறம்பட தீர்ப்பதற்கும், நீதிமன்றம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய நாம் அனைவரும் வழக்கற்றுப்போன முறைகளிலிருந்து விலகி அணுகுமுறையையே மாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் புதிய கட்டிடத்திற்கு இன்று (2021.01.25) அடிக்கல் நாட்டிய பின்னர் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட அளுத்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு பதிலாக கட்டப்படும் புதிய நீதிமன்ற வளாகம் 06 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படுவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான செலவு 16,500 மில்லியன் ரூபாயாகும்.

நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, நினைவுப் பலகையை திறந்து வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை வருமாறு, நீதிமன்றம் என்பது ஒரு நாட்டின் அடிப்படை தேவை. அதை நோக்கிய ஒரு வரலாற்று ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

அன்று நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தொடர்ச்சியான திட்டங்களை நாட்டுக்கு முன் வைத்தோம். அதற்காக மக்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றோம்.

நாங்கள் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாட்டின் பொதுமக்கள் விரும்பினர். நீதித்துறையிலும் இதேபோன்ற நம்பிக்கை உள்ளது.

அரசியல் ரீதியாக நாம் எவ்வாறான எண்ணப்பாட்டை கொண்டிருந்தாலும், இறையாண்மை நாட்டு மக்களிடமே உள்ளது. எனவே, நாம் முன்வைக்கும் கொள்கைகளும் சீர்திருத்தங்களும் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வரலாற்றில் ஒவ்வொரு முறையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நாங்கள் பணியாற்றினோம். தனிப்பட்ட குறுக்கீடு மூலம் நாங்கள் ஒருபோதும் சட்டத்தை வளைக்க முயற்சிக்கவில்லை.

எனவே, மக்களின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நம் நாட்டு மக்கள் இன்னும் காலாவதியான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து புதிதாக சொல்ல தேவையில்லை. இந்த அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிப்பது நமது பொறுப்பு.

தற்போதுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவை சமரசக் குழுவால் தீர்க்கப்பட முடியுமானால் அவை அதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

மேலும், வழக்கு விசாரணைகளின் தாமதம் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னதாகவே இறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

இந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, இன்று தொடங்கும் நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இதற்கு முன்னர் கொழும்பில் உள்ள அளுத்கடை கட்டிடங்களின் பாழடைந்த நிலை குறித்து விவாதித்த பின்னர், எந்த தீர்வும் முன்மொழியப்படவில்லை. இன்று நாம் ஒரு நிரந்தர தீர்வைக் கொண்டு வந்துள்ளோம். இதைப் பற்றி நாங்கள் 2014 இல் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அன்றே இதனை தொடங்க விரும்பினோம். ஆனால் ஆட்சி மாற்றத்தினால் அது நிகழவில்லை. ஆனால் இன்று இதைத் தொடங்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு இணையாக நாடு முழுவதும் 100 புதிய நீதிமன்ற அறைகளை நிறுவ நீதி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். நீதித்துறையின் உட்கட்டமைப்பு இந்த முறையில் உருவாக்கப்படும்போது, வழக்குகளை விரைவுபடுத்தலாம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் இது ஒரு வரலாற்று நடவடிக்கையின் ஆரம்பம்.

வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கு விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. அந்த வசதி சில சிறைகளுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் முழு நீதி அமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எங்கள் குறிக்கோள். எதிர்வரும் பெப்ரவரி முதல் அந்தப் பணியைத் தொடங்க அமைச்சர் ஆர்வமாக உள்ளார். இது நீதித்துறையின் செயல்திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

பௌதீக மேம்பாட்டின் மூலம் மாத்திரம் நீதித்துறையை மேம்படுத்த முடியாது. அதற்கு மனித வள மேம்பாடு தேவை. சட்டத் துறை தொடர்பான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வு வசதிகளை விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

சட்டத்தை புதுப்பித்து, சட்ட தாமதங்களை தடுக்க செயற்திறன் மிகுந்த முறையில் மோதல்களைத் தீர்க்கும் முறையை வெற்றிகரமாக்குவதற்கு அதன் பங்குதாரர்களான நீதிமன்றம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலாவதியான முறைகளில் இருந்து விலகி அணுகுமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தை நோக்கும்போது 40 ஆண்டுகளின் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் வெற்றி என்று நான் நம்புகிறேன். அத்தகைய நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைச்சரும் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும், பிரஜைகள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் நாங்கள் எப்போதும் விரும்புகின்றோம். மேலும், நீதித்துறையில் பணியாற்றும் பிரஜைகளுக்கு அந்த நிறுவனங்கள் குறித்த அச்சம் நீங்க வேண்டும்.

இந்த சீர்திருத்தங்களை ஒரே இரவில் நிறைவேற்ற முடியாது என்பது உண்மைதான். நீங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அந்த உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஒரு நாட்டிற்கான தேசிய நலனை, ஒரு சட்டத்தை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளோம். அதற்கு பொருத்தமான சட்ட கட்டமைப்பை நாட்டின் மத்தியில் புதுப்பிப்பதற்கு நீங்கள் உள்ளிட்ட இத்துறையைச் சேர்ந்த அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புகின்றோம்.

குறித்த நிகழ்வில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சீ ஜயசூரிய, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, அமைச்சர்களான பந்துல குணவர்தன, காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, சாகர காரியவசம், நீதிபதி தப்புல டி லிவேரா, மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக, நீதி அமைச்சின் செயலாளர் எம்.கே.மாயாதுன்னே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment