கொவிட்-19 தொடர்பான விடயங்களில் அரச அதிகாரிகளிடமிருந்து போதியளவு ஆதரவு கிடைப்பதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு சுகாதார அமைச்சு போதியளவு ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம். கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் குறைபாடுகள் பிரச்சினைகள் ஏற்படும்போது சுகாதார அமைச்சு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது பழியை போடுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொடர்பான விவகாரங்களில் எப்போதும் பழியை எங்கள் மீது போடுவது நியாயமில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும் நகரத்தின் நிலையை பொறுத்த வரை பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளன, இதன் காரணமாக பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க முயலும்போது சுகாதார அமைச்சுடன் தொடர்புபட்ட அலுவலகங்களை சேர்ந்த அதிகாரிகள் போதியளவு ஆதரவை வழங்காததை நாங்கள் அவதானித்துள்ளோம், என அவர் தெரிவித்துள்ளார்.
முழுப்பொறுப்பும் பொது சுகாதார பரிசோதகர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, அந்த மக்களிற்கு போதுமான அளவு உணவுப் பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பாலசூரிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment