இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை அழிக்க அதிகாரம் இல்லை - சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை அழிக்க அதிகாரம் இல்லை - சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த 121 படகுகளை அழிப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் அதிகாரம் இல்லை என்றும், அவற்றை கிருமி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து அதன் பின்னர் உரிய தரப்பினருடன் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு அனுப்பியுள்ள தெளிவுபடுத்தல் கடிதத்திலேயே சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்கு வந்த படகுகள் தொடர்பான விசாரணைகள் குறித்து இந்த கடிதத்தில் கூறப்படுகிறது.

1925 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு ஒழுங்குகளில் 70 ஆவது ஒழுங்கிற்கமைய படகினுள் காணப்படும் பாகங்களை நீக்க முடியும். எனினும் குறித்த படகுகளை தீயிட்டு அழிப்பதற்கு அதிகாரம் இல்லை.

எனவே குறித்த படகுகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையானது, கிருமி நீக்கத்திற்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகும்.

அதற்கமைய கிருமி நீக்கல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து உரிய தரப்பினரிடம் படகுகள் குறித்து பேசி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இலங்கை மன்னார் மற்றும் ஊர்காவற்றுறை கடல் பகுதிக்கு, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இவ்வாறு அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 94 படகுகளும், மன்னார் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 27 படகுகளும் அழிக்கப்பட உள்ளன.

மொத்தம் 121 படகுகள் நீண்ட காலமாக, கடலிலேயே கிடப்பதால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றங்கள் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை நீரியல் துறை தெரிவித்துள்ளதாகவும் நியூஸ் 7 மற்றும் த இந்து ஆகிய இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment