Blue Ocean Breeze மற்றும் Blue Ocean Realty ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக கொள்வனவாளர் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இணக்கம் காணப்பட்ட உடன்படிக்கைகளுக்கு அமைய, 275 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டடங்களை நிர்மாணித்து, உரிய காலத்திற்குள் கையளிக்கத் தவறியமை தொடர்பில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது Blue Ocean குழுமத்தின் பங்குதாரர்களான இரண்டு பணிப்பாளர்களை கடும் பிணை நிபந்தனையுடன் விடுவிப்பதற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொள்கை ரீதியிலான விடயங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் COVID-19 தொற்றினால் திட்டமிட்ட வகையில் நிர்மாணப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்ய முடியாமற்போனதாக பிரதிவாதி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
எனினும், அந்த செயற்றிட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சினைக்குரிய சொத்துக்களை அடுத்த வருடம் செப்டம்பர் மாதமளவில் நிர்மாணித்துக் கொடுக்க முடியும் எனவும் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
தமது தரப்பு 275 மில்லியன் ரூபாவை இதற்காக முதலீடு செய்துள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார ஆகியோர் தெரிவித்தனர்.
எனினும், இணக்கம் காணப்பட்ட காலப் பகுதிக்குள் அந்த சொத்துக்களை கையளிப்பதற்கு நிறுவனம் தவறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
Blue Ocean குழுமத்தின் பங்குதாரர்களான பணிப்பாளர்கள் வௌிநாடு செல்ல நீதிமன்றம் இன்று தடை விதித்தது.
No comments:
Post a Comment