நான்கு கால்பந்து மைதானங்களின் அளவுடைய, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் துபாய்க்கு வருகை தந்துள்ளது.
துபாயின் ஜெபல் அலி பகுதி அமீரகத்தின் முக்கிய வர்த்தக துறைமுகமாகும். ஆசியா - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சார்ந்த கடல் போக்குவரத்தில் இந்த துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் அனைத்து வகையான சரக்கு கப்பல்களை கையாளும் பிரமாண்டமான தளவாட வசதிகள் இந்த துறைமுகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘ஹெச்.எம்.எம்.டான்ஸ்க்’, துபாய் துறைமுகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள லண்டன் கேட்வே முனையத்தில் இருந்து இந்த துறைமுகத்திற்கு தற்போது வருகை புரிந்துள்ளது.
தென் கொரிய நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 1,312 அடி நீளமும், 200 அடி அகலமும் கொண்டதாகும். அதாவது 4 கால்பந்து மைதானங்களின் அளவுடைய கப்பல் இதுவாகும். இதில் மொத்தம் 20 அடி நீளமுள்ள 23 ஆயிரத்து 964 கன்டெய்னர்களை ஏற்றி செல்ல முடியும். 2 லட்சத்து 28 ஆயிரத்து 283 கிலோ எடையை ஏற்றி செல்லக்கூடியது.
இந்த ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி தென் கொரியாவில் இருந்து இந்த கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கியது. தற்போது துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல தயாராகி வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஜெபல் அலி உட்பட ஒரு சில துறைமுகங்களே இதுபோன்ற பிரமாண்ட கப்பல்களை கையாள முடியும். துபாய் துறைமுகம் ஒரே நேரத்தில் இதுபோன்று 10 மெகா அளவுடைய கப்பல்களை கையாளும் திறன் கொண்டது. மேற்கண்ட தகவலை துபாய் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி முகம்மது அல் முவல்லம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment