நாம் ஆட்சியமைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசியம், தேசிய மரபுரிமைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். கடந்த அரசாங்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள தேசிய மரபுரிமைகளை மீண்டும் புத்தாக்கம் செய்வது மகிழ்ச்சிக்குரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய உற்பத்திகள், தேசிய மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கு முறையான நிலைமை வழங்கியுள்ளோம். நாம் ஆட்சியமைக்கும் காலத்தில் தேசியம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது. இதன் காரணமாக தேசிய உற்பத்திகள் முன்னேற்றமடைந்தது.
கடந்த அரசாங்கம் தேசிய உற்பத்திகள், மரபுரிமைகள் சார்ந்த எந்த நடவடிக்கைகளையும் சீராக முன்னெடுக்காததால் இவை சார்ந்த தொழிற்துறைகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய தொழில் முயற்சியாளரால் அரச வங்கிகளில் கடன் பெறும் போது அவர்களிடம் தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு வங்கிகளின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். தேசிய உற்பத்திகளையும், மரபுரிமைகளையும் பாதுகாப்பதற்கும், ஊக்குப்படுத்துவதற்கும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என்றார்.
No comments:
Post a Comment