கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்க கிடைத்த நிதிகள் தொடர்பில் உண்மைத் தகவலை அரசாங்கம் வெளியிட வேண்டும் - சுனாமி நிதியைப்போல் இந்த நிதியையும் அரசாங்கம் மோசடி செய்து வருகின்றதா? - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

கொரோனாவில் இருந்து நாட்டை பாதுகாக்க கிடைத்த நிதிகள் தொடர்பில் உண்மைத் தகவலை அரசாங்கம் வெளியிட வேண்டும் - சுனாமி நிதியைப்போல் இந்த நிதியையும் அரசாங்கம் மோசடி செய்து வருகின்றதா?

(செ.தேன்மொழி) 

கொரோனா தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்கவும், ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுப்பதற்காகவும் ஜனாதிபதியால் முடியும் என்றால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி விருப்பமின்றி பாராளுமன்றத்தை கூட்டுமாறு நாங்கள் கோரிக்கையும் விடுக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை பாதுகாக்க கிடைக்கப் பெற்ற நிதிகள் தொடர்பில் உண்மை தகவலை வெளியிட வேண்டும் என்றும் கூறினார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உலக வங்கியிலிருந்து 127 மில்லியன் டொலரும் சீனாவிலிருந்து முதற்கட்டமாக 500 டொலரும், இரண்டாம் கட்டமா 750 டொலரும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. ஆனால் இந்த நிதி தொடர்பில் அரசாங்க இணையத்தளத்தில் பதிவாகியுள்ளது. 

சுனாமி நிதியைப்போல் இந்த நிதியையும் அரசாங்கம் மோசடி செய்து வருகின்றதா என தற்போது பலர் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்ட சலுகைகள் எதுவும் இதுவரையில் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. 

5000 ரூபாய் நிதியும் இன்னும் முழுமையாக பெற்றுக் கொடுக்கப்படதா நிலையில் இம்மாதத்திற்கான நிதியையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இராணுவத்தினரை பிரசித்திபடுத்தி செயற்பட்டு வரும் அரசாங்கம். கடற்படையினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றது. அவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்லவா. இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதனையும் பெற்றுக் கொடுக்காமல் அவர்களை விமர்சிப்பது நியாயமற்ற செயலாகும்.

வெளிநாடுகளில் பணிப்புரிவோரை நாட்டுக்கு வர வேண்டாம் என்கின்றனர். இவர்களாளேயே எமது நாட்டுக்கு பெரும் வருமானம் கிடைக்கின்றது. இவர்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதே அரசாங்கத்தின் கடமை. இதைவிடுத்து இவர்களை நாட்டுக்குள் பிரவேசிக்க வேண்டாம் என்று உத்தரவிடமுடியாது. 

கொரோனா தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையையும் விட எதிர்வரும் காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டி ஏற்படும். பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுக்க நேரிடும். கடந்த காலத்தில் தூரநோக்கு சிந்தனையின்றி வரி குறைப்பு செய்ததினால் 450 மில்லியன் அரச வருமாணத்தை அரசாங்கம் இழக்க வேண்டி ஏற்பட்டது. தற்போது வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் அரச வருமானம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மேல் மாகாணத்தில் காணப்படும் தொழிற்சாலைகளிலிருந்தே அரசாங்கத்திற்கு அதிகமான வரி கிடைக்கப் பெற்றது. தற்போது அதற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. 

217 மில்லியன் காசு அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டில் போதிய பொருளாதார வளர்ச்சி இல்லாத தருணத்தில் காசு அச்சிடுவதும் பெரும் சிக்கலை தோற்றுவிக்கும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. 

எதிர்வரும் தினங்களில் 1000 பேர் வரையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என்று சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டை மூடக்கி வைத்திருக்கவும் முடியாது. நாடு வழமையான வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டும். விவசாய உற்பத்திகளால் நாட்டிற்கு பெருந்தொகையான வருமாணத்தை பெற்றுக் கொடுக்கமுடியாது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் தேசிய உற்பத்தி தொடர்பில் கருத்து தெரிவித்தாலும். இதனால் பெரும் வருமாணம் ஈட்ட முடியாது. மகாவலித் திட்டம், ஆடை உற்பத்தி மற்றும் கிராமோதயம் போன்ற செயற்திட்டங்களினாலேயே அரசாங்கத்திற்கு இந்தளவேனும் வருமானம் கிடைக்கின்றது. 

வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிர்கட்சி என்ற வகையில் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுப்போம். பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவி இன்றி கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்படும் நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும் என்று ஜனாதிபதி எண்ணினால் மக்களும் இவ்வாறே கருதினால் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்க மாட்டோம். 

இதேவேளை வைரஸ் பரவல் தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டும். தொற்றுக்குள்ளானவர்களின் தொகை மற்றும் உயிரிழந்தவர்களின் தொகை அதிகரித்தால் அதனை இரவு வேளையில் வெளியிட்டு வைரஸ் பரவலினால் ஏற்படும் நெருக்கடியை அரசாங்கம் மறைத்து வருவதாக தோன்றுகின்றது.

No comments:

Post a Comment