கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார ஸ்தாபனம் சீனா பக்கம் சாய்ந்து விட்டது - அமெரிக்கா குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார ஸ்தாபனம் சீனா பக்கம் சாய்ந்து விட்டது - அமெரிக்கா குற்றச்சாட்டு

உலக சுகாதார ஸ்தாபனம், கொரோனா வைரஸ் பிரச்சினையில் சீனா பக்கம் சாய்ந்து விட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்.

அதாவது, கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார ஸ்தாபனம், சீனாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது என்று அவர் கூறினார்.

இதேபோன்ற கருத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரும், அதன் வெளியுறவு குழு மூத்த உறுப்பினருமான மைக்கேல் மெக்காலும் வைத்தார்.

இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், “கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவுக்கு மிகவும் சாதகமாக நடந்து கொள்கிறது என்று செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோவும், பிரதிநிதித்துவ சபை எம்.பி. மைக்கேல் மெக்காலும் குற்றம் சுமத்தி உள்ளனரே, இந்த கருத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது உலக சுகாதார ஸ்தாபனம், சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்து விட்டது. இதில் ஏராளமான மக்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் மிகவும் நியாயமற்று நடந்து கொள்கிறது என்ற பேச்சு பரவலாக எழுந்து இருக்கிறது. உலக சுகாதார ஸ்தாபனம், நியாயமுடன் நடந்து கொள்ளவில்லை என்று ஏராளமானோர் உணர்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்து விட்டது என்ற டிரம்பின் குற்றச்சாட்டு உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு மத்தியில் கிரேக் ஸ்டியூப் என்ற அமெரிக்க எம்.பி, “உலக சுகாதார ஸ்தாபனம், சீனாவின் ஊது குழலாகவே மாறி விட்டது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் உலக சுகாதார ஸ்தாபனமும், சீனாவும் இதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும்” என்று கண்டித்துள்ளார்.

இதேபோன்று மற்றொரு அமெரிக்க எம்.பி.யான ஜோஷ் ஹாலேயும், கிரேக் ஸ்டியூப் குரலை எதிரொலித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்த தொற்று பரவி வருகிற கால கட்டத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாகவும், உலகத்துக்கு எதிராகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சாய்ந்து விட்டது” என்று குறிப்பிட்டார்.

உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், மற்ற எம்.பி.க்களும் கருத்து தெரிவித்து இருப்பதற்கு நியாயமான காரணம் இருப்பதாக கருதப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளாரான கெப்ரேய்சஸ், புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உருவானபோது அதை முடிவுக்கு கொண்டு வருவதில் சீன தலைமை உறுதியுடன் செயல்பட்டது என கூறிய கருத்துதான் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதான் பிரச்சினைக்கு காரணமாகவும் மாறியுள்ளது.

இவர் கடந்த ஜனவரி மாதம் சீனா சென்று ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்தார். அதேபோன்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் குழுவும் சீனா சென்றது என்பது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment