பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது : தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறது அரசு - நாமல் ராஜபக்ஷ சாடல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 28, 2025

பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது : தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்கிறது அரசு - நாமல் ராஜபக்ஷ சாடல்

(இராஜதுரை ஹஷான்)

பொலிஸ்மா அதிபர் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார். பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே பொலிஸார் செயற்படுகின்றனர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் பிரதிநிதி ஒருவரை பகிரங்கமாக சுட்டுக் கொலை செய்யும் நிலையே இன்று காணப்படுகிறது. இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து கொலைகலையும் அரசாங்கம் பாதாளக் குழுக்களின் கணக்கில் சேர்க்கிறது. எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களும் பாதாளக் குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்று மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டையும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி புலனாய்வுத் தகவல்களை அலட்சியப்படுத்தியவர்கள்தான் இன்று பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய உயர் பதவிகளில் உள்ளார்கள். இன்றும் புலனாய்வுத் தகவல்களை இவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள்.

323 கொள்கலகள் எங்கு சென்றது என்பது இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இலங்கைக்கு இரண்டு கொள்கலன்களில் ஐஸ் போதைப் பொருள் வருவதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்கு தகவலளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறது.

பொலிஸ்மா அதிபர் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார். பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே பொலிஸார் செயற்படுகின்றனர். அரசியல் நோக்கங்களுக்கு அமைய பொலிஸ் திணைக்களம் செயற்பட்டால் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்றார்.

No comments:

Post a Comment