(இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்கள், தாஜுதீன் படுகொலையாளிகள், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் பொறுப்புதாரிகள் அனைவரும் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். திருடர்கள் திருடர்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியராட்சி தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாரன பாதாளக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவருக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்ட விடயத்தால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாரன தெரிவித்துள்ளார். ஜகத் விதாரன நீதிமன்றம் செல்ல வேண்டும் அப்போதுதான் உண்மை வெளிவரும், நாட்டு மக்களும் உண்மையை தெரிந்து கொள்வார்கள்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்கள், தாஜூதீன் படுகொலையாளிகள், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் பொறுப்புதாரிகள் அனைவரும் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். திருடர்கள் திருடர்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
ஜனநாயகத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படவில்லை. போதைப் பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராகவே அரசாங்கம் செயற்படுகிறது. கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியினர் அச்சமடைவர்களாயின் அவர்களும் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment