இம்ரான் கானுக்கு பிணை : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

இம்ரான் கானுக்கு பிணை : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதியன்று, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இம்ரான் கானின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள், அந்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்தப் போராட்டம் கலவரமாக மாறி லாஹூரில் அமைந்திருந்த இராணுவத் தளபாடங்களும் அதிகாரிகளின் வீடுகளும் சூறையாடப்பட்டன.

இந்தச் சம்பவத்தில், இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியான தெஹ்ரிக்-இ-இன்சாஃபின் முக்கிய தலைவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன. 

இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்க வேண்டுமென கடந்த 2024ஆம் ஆண்டு இம்ரான் கான் தரப்பில், லாஹூர் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து, அவர் மீண்டும் லாஹூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நேற்று (21) நடைபெற்றது. இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டனர். 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது, தேசியளவில் அவரது ஆதராவளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து, தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுஃபிகார் புகாரி கூறுகையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலைக்கு, இன்னும் ஒரே ஒரு வழக்கில் மட்டும் பிணைக் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரொய்ட்டர்

No comments:

Post a Comment