(இராஜதுரை ஹஷான்)
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளுக்கும், அரசியல் தரப்பினருக்குமிடையில் தொடர்புண்டு பாதாளக் குழுக்களின் முக்கிய தலைவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களுக்கு இடையிலான போதைப் பொருள் வியாபாரத்தின் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகிறது. 2024.09 மாதத்துக்கு பின்னர்தான் இலங்கையின் பாதாளக் குழுக்கள் தோற்றம் பெற்றதை போன்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
பாதாளக் குழுக்கள் தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சியினருக்கும் பாதாளக் குழுக்களுக்கும் இடையில் தொடர்புண்டு. கடந்த காலங்களில் அரசியல் அனுசரணையுடன் பாதாளக் குழுக்கள் எழுச்சி பெற்றன.
பாதாளக் குழுக்களுக்கும், அரசியல் தரப்பினருக்கும் இடையில் தொடர்புண்டு என்பதற்கு பல சம்பவங்கள் சாட்சியாக உள்ளன. பாதாளக் குழுக்களின் முக்கிய தலைவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றன. தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இல்லை. தற்போது ஆட்சியமைக்கும்போது மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எதிர்க்கட்சியினர் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment