நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற போராட்டத்தின்போது, நீதிமன்ற உத்தரவை மீறி, பொது ஒழுங்கை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அம்பாந்தோட்டை பிரதம நீதவான் ஓஷத் மிகார நேற்று (28) பிடியாணை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் மாலைத்தீவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ நகர்த்தல் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட பிணையின் கீழ் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடியமை, நீதிமன்றின் உத்தரவை மீறியமை, 03 ஜீப் வாகனங்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் நெடுஞ்சாலையில் தீ விபத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை நாமல் ராஜபக்ஷ இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 102 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி, கட்டுநாயக்காவில் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அவரது ஆதரவாளர்கள் குழு விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்தனர்.
பின்னர் நாமல் ராஜபக்ஷ பி.ப. 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விருந்தினர்களுக்கான வழி ஊடாக அவர் வௌியேறினார்.
No comments:
Post a Comment