(எம்.வை.எம்.சியாம்)
சட்டவிரோத போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 450 இக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் எதிர்காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக தேவையான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கமைய பொலிஸாரினால் இந்த நாட்களில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக தென் மாகாணத்தின் மாத்தறை, காலி மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளை மையமாகக் கொண்டு 5ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 11 மணி வரையான காலப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக பொலிஸார் பொலிஸ் விசேட அதிரப்படையினர் இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த சுமார் 1500 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கமைய ஹெரோயின் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 457 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் பிரிவுகளை மையமாகக்கொண்டு 207 வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் இதன்போது 3,288 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் 1,365 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 18 கிராம் 105 மில்லி கிராம் போதைப் பொருளும் மீட்கப்பட்டது.
மேலும் 26 பேர் ஐஸ் போதைப் பொருளுடன் 26 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 118 கிராம் 625 மில்லி கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 33 கிராம் 71 மில்லி கிராம் கஞ்சாவுடன் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 16 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சுமார் 649 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் 28 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் எதிர்காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக தேவையான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment