ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து ஈரானுக்கு தேவையான அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ”ஈரானை தாக்கியதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய போரை தொடங்கி வைத்துள்ளார். அமைதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்தவொரு இராணுவ நோக்கங்களையும் அடைய தவறிவிட்டது. ஈரான் சிறிய சேதத்தை மட்டுமே சந்தித்துள்ளது. அது எதிர்காலத்தில் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட இந்த தாக்குதல் வழிவகுக்கும்.
பல நாடுகள் ஈரானுக்கு தங்களது அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. (ஆனால் எந்த நாடுகள் என அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை). அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஈரானை அரசியில் ரீதியில் பலப்படுத்தியுள்ளது. ஈரானில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக மக்கள் ஒன்றுதிரண்டு தங்களது ஆதரவை வலுப்படுத்தி வருகின்றனர்” என மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
அரக்சி – புதின் சந்திப்பு: இதனிடையே, அமெரிக்க வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து இன்று பேச்சுவார்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ ரஷ்யா ஈரானின் நண்பன். நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆலோசனை நடத்துவது வழக்கம். ரஷ்ய ஜனாதிபதியுடன் தீவிர ஆலோசனை நடத்துவதற்காக அவரை சந்திக்க உள்ளேன்” என்றார்.
No comments:
Post a Comment