அமெரிக்க தாக்குதலால் பிராந்தியத்தில் மோதல் புதிய உச்சம் : இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணை வீச்சில் பலத்த சேதம் : அனைத்துக்கும் தயார் என்கிறது ஈரான் - News View

About Us

About Us

Breaking

Monday, June 23, 2025

அமெரிக்க தாக்குதலால் பிராந்தியத்தில் மோதல் புதிய உச்சம் : இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணை வீச்சில் பலத்த சேதம் : அனைத்துக்கும் தயார் என்கிறது ஈரான்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுடன் இணைந்த அமெரிக்கா, ஈரானின் மூன்று பிரதான அணு நிலைகளை தாக்கியதை அடுத்து மத்திய கிழக்கில் மோதல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தமது இறைமை மற்றும் மக்களை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதில் அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டிருப்பதோடு 20 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். நேற்றுக் காலை இஸ்ரேல் எங்கும் அபாய சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதோடு மேற்கு ஈரானில் இஸ்ரேலும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பிராந்தியத்தின் இரு எதிரி நாடுகளும் கடந்த ஒரு வாரமாக பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையிலேயே அமெரிக்கா கடந்த சனிக்கிழமை (21) இந்த மோதலில் இணைந்தது.

‘போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உட்பட ஈரானில் மூன்று அணு நிலைகள் மீது எமது மிக வெற்றிகரமான தாக்குதலை நாம் பூர்த்தி செய்துள்ளோம்’ என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இராணுவ விமானங்கள் தற்போது நாடு திரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இப்போது அமைதிக்கான நேரம் வந்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய டிரம்ப், ‘ஈரானின் எதிர்காலம் அமைதியானது அல்லது துயரமானதாக இருக்கும்’ என்றும் அமெரிக்க இராணுவத்தினால் மேலும் பல இலக்குகள் தாக்கப்படக்கூடும் என்றும் கூறினார்.

‘ஈரானின் முக்கிய அணு செறிவூட்டல் மையங்கள் முழுமையாகவும் முற்றாகவும் அழிக்கப்பட்டுவிட்டன’ என்று டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி, அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறி இருப்பதாக குற்றம்சாட்டினார்.

‘ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதி நோக்கம் கொண்ட அணு நிலைகளை தாக்கி ஐ.நா சாசனம், சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளது’ என்று அரக்சி சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘இன்று காலை இடம்பெற்ற சம்பவம் ஆத்திரமூட்டக்கூடியது மற்றும் நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இந்த கடுமையான ஆத்திரமூட்டக்கூடிய, சட்டவிரோதமான மற்றும் குற்றவியல் நடத்தை குறித்து ஒவ்வொரு ஐ.நா உறுப்பு நாடுகளும் அவதானம் செலுத்த வேண்டும்’ என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் அதன் இறைமை, நலன் மற்றும் மக்களை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனினும் கடந்த சனிக்கிழமை ஈரானை இராஜதந்திர ரீதியில் அணுகி இருக்கும் அமெரிக்கா, இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் திட்டமிடப்பட்டது என்றும் பிராந்தியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பதாக அமெரிக்காவின் சி.பி.எஸ். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் அணு நிலைகள் மீதான இந்தத் தாக்குதல்கள் பி-2 ஸ்டீல்த் குண்டுகளை பயன்படுத்தியே அமெரிக்கா நடத்தியுள்ளது. பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டு என அழைக்கப்படும் பி-2 குண்டை டொமஹவ்க் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவி இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின் கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் அரசு ஊடகத்தின் துணை அரசியல் பணிப்பாளர் ஹசான் அபேதினி இது குறித்து பேசும் போது, ஈரான் சில காலத்திற்கு முன்பே இந்த 3 தளங்களையும் காலி செய்துவிட்டதாக கூறினார்.

அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ‘அங்கிருந்த பொருட்களை ஈரான் ஏற்கனவே அகற்றிவிட்டதால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை,’ என்று கூறினார்.

இந்த மோதலில் டிரம்பின் தலையீட்டை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. டிரம்பின் இந்த உறுதியான முடிவு வரலாற்றை மாற்றும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

மறுபுறம் மத்திய கிழக்கில் சவூதி அரேபியா, ஈரான், ஓமான் மற்றும் கட்டார் நாடுகள் அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பெரும் கவலையை வெளியிட்டுள்ளன.

ஈரான் மீதான அமெரிக்காவின் படைப் பிரயோகம் பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார். ‘இந்த மோதல் விரைவாக கட்டுப்பாட்டை இழந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும் என்று ரஷ்யா கூறுகிறது.

‘ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பிரதேசத்தை ஏவுகணை மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு உட்படுத்துவது பொறுப்பற்ற முடிவு.

அது என்ன வாதங்களைக் கொண்டு வந்தாலும், சர்வதேச சட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானங்களை அப்பட்டமாக மீறுகிறது’ என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று (23) ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க மொஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இஸ்ரேல் மீது ஈரான் நேற்றுக் காலை நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஹைபா மற்றும் டெல் அவிவை சூழவுள்ள பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் வீடுகள் இடிபாடுகளாக மாறியுள்ளன.

‘எமது ஒட்டுமொத்த வீடும் அழிக்கப்பட்டுவிட்டது ஒன்றும் மிஞ்சவில்லை’ என்று அவியாட் செர்னிசோவ்ஸ்கி என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். ஏற்பட்டிருக்கும் சேதம் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு நடத்தி வருகின்றனர். ‘வீடுகள் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளன’ என்று டெல் அவிவ் ஆளுநர் ரொன் ஹுல்டன் சேதங்களை பார்வையிட்ட நிலையில் குறிப்பிட்டுள்ளார்.

‘பாதுகாப்பு முகாம்களில் அடைக்கலம் பெற்றவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். சேதங்கள் மிகத் தீவிரமாக உள்ளன. எனினும் உயிர்ச் சேதங்கள் இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல் அவிவுக்கு அருகே பென்கூரியன் விமானநிலையம் மற்றும் பல இலக்குகள்; மீதும் அதி நவீன நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஈரான் இராணுவம் நேற்று குறிப்பிட்டது.

கடந்த ஜூன் 13 ஆம் திகதி ஈரானின் இராணுவ மற்றும் அணு சக்தி இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வெடித்த இந்த மோதலில் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருவதோடு குறைந்து 430 பேர் கொல்லப்பட்டு 3,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக ஈரான் அரச ஊடகமான நூர் நியுஸ் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment