மஹர மற்றும் ஏக்கல பள்ளிவாசல்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கிறோம். அத்துடன், அப்பகுதிகளுக்கு களவிஜயங்களை மேற்கொண்டு ஆராய்ந்து நிலமைகளை சீர்செய்ய வேண்டியுள்ளது என முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஆளும் தரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் குறித்து உரிய தரப்புடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்க தரப்பும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் ஆராயும் சந்திப்பு நேற்று (25) மாலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் ஹினுதும சுனில் செனவி, பிரதி சபாநயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, பிரதியமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் உள்ளிட்டோர் இச் சந்திப்பில் அரச தரப்பில் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அத்துடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இச் சந்திப்பில் கலந்துகொண்டமை விசேட அமைசமாகும்.
வைத்திய, தாதி மாணவிகளின் ஆடை
வைத்திய மாணவிகளும் தாதி மாணவிகளும் பயிற்சிக் காலத்தின்போது கலாசார ஆடை அணிய முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளமை பெரும் சவாலாக உள்ளது என அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்கட்டினர்.
இவ்வாறு சீருடை பிரச்சினை இருப்பதனால் பல மாணவிகள் பயிற்சியை நிறைவு செய்யாது இடைநடுவில் கைவிடும் துரதிஷ்ட நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனிடையே, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடியுடன் விரிவுரைக்கு சென்ற மாணவர் ஒருவருக்கு தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கை மேற்கொள்வதற்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றது. இது விடயத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஏனைய சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மாணவர்களின் ஆடை சுதந்திரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவொன்று இருக்கின்ற நிலையில் அது கண்டுகொள்ளப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் நீடித்து வருவதாக இந்த குழுவில் இருந்த சட்டத்தரணியொருவர் அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளித்த கலாசார அமைச்சர் ஹினுதும சுனில் செனவி, இந்த விடயம் தொடர்பில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். அத்துடன், முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கும் இவ்வாறான சவால்கள் குறித்து கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பவற்றுடன் கலந்தாலோசனை நடத்தி பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி யோசிக்கலாம் என தெரிவித்தார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இந்த விடயம் தொடர்பில் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன எனவும் கேட்டறிந்துகொண்டார்.
ஜனாஸா விடயத்தில் இறுக்கமான நடைமுறை
கொவிட் தொற்றுக்கு பிறகு ஜனாஸாக்கள் விடயத்தில் பொலிஸாரும் கிராம சேவகர்களும் மிகவும் கடினமாக நடந்துகொள்வதாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பின்போது அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, கொரோனா தொற்று காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த இறுக்கமான கட்டுப்பாடுகளை தற்போதும் பின்பற்ற முயற்சி செய்வதால் முஸ்லிம் சமூகம் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.
இவ்விடயத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர் இருந்த நடைமுறையை பின்பற்றுவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும். அல்லாவிடி, 2023 ஆம் ஆண்டு இவ்விடயமாக அரசாங்கத்தால் விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி செயற்படும்போது ஜனாசா விவகாரங்களில் முஸ்லிம்களுக்கு சவால்கள் இருக்கமாட்டாது எனவும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எடுத்துறைத்தனர்.
மதநூல்கள் இறக்குமதியில் சிக்கல்
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய மார்க்க நூல்கள் விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடி தொடர்வதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அர்கம் நூராமித் இதன்போது குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய மார்க்க நூல்களை நீண்ட நாட்களுக்கு சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்க வேண்டாம். பொருத்தமாற்றதாயின் நீண்ட நாட்களுக்கு இழுபறி நிலையில் நூல்களை வைத்திருக்காமல் அவற்றை மீளவும் ஏற்றுமதி செய்வதே சிறந்தது எனவும் சுட்டிக்காட்டிய உலமா சபையின் செயலாளர் இஸ்லாமிய நூல்களில் மார்க்கம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் கவனம் செலுத்தி பரிந்துரை வழங்குவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறதா என்று எங்களால் பார்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதுவிடயமாக கூடுதல் கவனம் செலுத்தி உரிய தரப்புடன் பேசி தீர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக இங்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
மஹர, ஏக்கல பள்ளிவாசல் விவகாரம்
அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசலை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் எடுத்துரைத்தார்.
அத்துடன், குறித்த பள்ளிவாசல் 1800களில் இராணுவத்தில் இருந்த மலாய் முஸ்லிம்களின் தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டமையை சுட்டிக்காட்டியதுடன், இப்பள்ளிவாசலுக்கு அருகில் மலாய் முஸ்லிம்கள் பலரும் இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஏக்கல பகுதியில் உள்ள பள்ளிவாசல் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதுவிடயமாக கருத்துரைத்த பிரதியமைச்சர் முனீர் முழப்பர், மஹர பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வாக ராகமயில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியொன்றும் அல்லது சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 20 பேச்சர்ஸ் காணியொன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, இதற்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சுமுகமாக இவ்விடயத்தை தீர்த்துக்கொள்ள முடியும் என்றார்.
இதனிடையே, ஏக்கல பள்ளிவாசல் குறித்து பிரதேச செயலாளரிடம் கலந்துரையாடியிருந்தோம். குறித்த பள்ளிவாசல் இருக்கும் பகுதியில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள் இல்லை. எனவே, அப்பிரதேசத்திற்கு களவிஜயமொன்றை மேற்கொண்ட பின்னரே இவ்விடயத்திற்கு ஒரு தீர்வை பெற நடவடிக்கை எடுக்கலாம் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய குழு நியமிக்கவும்
அதேவேளை கடந்த காலங்களிலும் அரசாங்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது எங்களோடு பேசியிருக்கின்றனர். எனினும், எந்த பிரச்சினைக்கும் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதற்கு மாற்று நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிவில் அமைப்பிகளின் பிரதிநிதிகள் பலராலும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர்களுக்கு அதிகமான வேலைப்பளுக்கள் இருக்கலாம். அத்தோடு, இரு மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்படும்போது உடனடித் தீர்வை பெற்றுக்கொள்வது நடைமுறை சாத்தியமற்றதாக அமைகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது, முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு செயற்குழுவொன்றை நியமிப்பது தொடர்பான ஆலோசனையொன்றை கொழும்பு திறந்த பல்கலைக்கழக பேராசிரியர் கரீம்தீன் முன்வைத்தார்.
சிங்கப்பூர், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இவ்வாறான சபைகள் இருக்கின்றன. அவற்றின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு தீர்வை முன்வைக்கும் பொறிமுறையொன்று அந்நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. எனவே, அதுபோன்ற செயற்குழுவொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பது குறித்து சிந்திக்க முடியும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஆளும்தரப்பினர், ஹஜ்குழு மற்றும் வக்பு சபைகளுக்கான நியமனங்கள் வழங்கும்போது எமக்கு பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. ஏராளமானோர் இவ்வாறான சபைகளில் அங்கத்துவம் பெற முயற்சிப்பதும் பொருத்தமானவர்களை இனங்காண்பதில் உள்ள சிக்கல்களுமே இதற்கு காரணம். எனவே, சட்டரீதியிலான ஒரு குழுவொன்றை நியமிப்பது குறித்து பின்னாட்களில் சிந்திக்கலாம். தற்போதைக்கு சிவில் அமைப்புகளின் முன்மொழிவுடன் குழுவொன்றை நியமித்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுககு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அரச தரப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து முஸ்லிம் சிவில் அமைப்புகளுடனான அடுத்த சந்திப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது
Vidivelli
No comments:
Post a Comment