நுவரெலியா இ.போ.ச டிப்போவிற்கு உட்பட்ட நானுஓயா மற்றும் ரதல்ல ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் அரச பஸ்களில் தவறான மற்றும் பொருத்தமற்ற பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் குழப்பத்திற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
தினமும் நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து இயக்கப்படும் அரச பஸ், காலை நேரத்தில் நானுஓயா பிரதான நகர் வரையும் இரவு 7:15 மணிக்கு நுவரெலியாவிலிருந்து ரதல்ல நகர் வரையும் இயக்கப்படுகிறது.
ஆனால், இந்த பஸ்ஸில் வெளிமடை - பொலன்னறுவை என்ற வழித்தட பெயர் பெரிய எழுத்தில் காட்சியளிக்கப்படுவதால் பயணிகள் தவறாக ஏறி, பாதியில் இறங்கி திரும்ப வேண்டியநிலை ஏற்படுகிறது.
புதிய பயணிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் வயதானோர் இந்த தவறான பெயர் பலகையை பார்த்து குழப்பமடைந்து தவறான பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும், சிலர் மீண்டும் இறங்கி பஸ் மாற்றும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பயணிகள், இரவு நேரங்களில் இயக்கப்படும் பஸ்களுக்கு ஒளிரும் டிஜிட்டல் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், தேவையற்ற வழித்தட பெயர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் உரிய அதிகாரிகளை கோருகின்றனர்.
No comments:
Post a Comment