தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி சேவை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் எந்தவொரு தரவுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது.
சபையின் கூடுதல் பொது முகாமையாளர் பிரதீப் ஹேரத் கூறுகையில், தற்போது தரவு முறைமையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஞாயிறு (01) மாலை, அறியப்படாத ஒரு நபர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் இணையதளத்தில் அனுமதியின்றி நுழைய முயற்சித்துள்ளார். அப்போது, அந்த நபர் சபையின் குறுஞ்செய்தி சேவையில் ஊடுருவி, பயனாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 10,000 குறுஞ்செய்திகள் அந்த நபரால் பயனாளர்களின் கைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் செய்திகள் மூலம், தரவுகளைப் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு பயனாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உடனடியாக செயல்பட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, குறுஞ்செய்தி சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவந்து, அனைத்து பயனாளர்களுக்கும் இந்த போலி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், அரச நிறுவன இணையத்தளங்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேர செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறது.
இணையத்தளங்களின் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்களே இந்த சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுத்ததாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
No comments:
Post a Comment