ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன. எனினும் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.
அரசாங்கம் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம் இன மோதலிற்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.
வோர்க் கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் போர் கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது, இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
No comments:
Post a Comment