அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில், இன்று வியாழக்கிழமை (26), சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 9 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சை குழுவின் சார்பில் 03 உறுப்பினர்களும் மொத்தமாக 23 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்திற்கு சமூகமளித்திருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.நளீம் ஆகிய இருவரும் போட்டியிட்டிருந்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், 7 மேலதிக வாக்கு வித்தியாசத்தில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், உப தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வி.வினோகாந், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினர் ஏ.சதானந்தன், சுயேட்சை குழு உறுப்பினர் எஸ்.எல்.ஏ.நசார் உள்ளிட்ட மூவர் போட்டியிட்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வி.வினோகாந் 12 வாக்குகளைப் பெற்று சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment